வீட்டில் முடங்கிய வீரர்கள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஏறக்குறைய 8 மாதங்கள் இந்திய வீரர்கள் எந்தவித போட்டிகளிலும் பங்கேற்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் அவர்கள் ஐபிஎல் 2020 போட்டிகளில் பங்கேற்பதற்காக வெளியில் வந்தனர்.
நாளையுடன் நிறைவு
ஐபிஎல் போட்டிகள் சிறப்பான வகையில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 வடிவங்களிலும் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இரு அணிகளும் இறுதி டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகின்றன. இந்த தொடர் நாளையுடன் முடிவடைய உள்ளது.
டி20 உலக கோப்பை தொடர்
இதையடுத்து இந்தியாவில் நடைபெறவுள்ள இங்கிலாந்துடனான தொடர் தொடர்ந்து ஐபிஎல் உள்ளிட்ட தொடர்கள் என இந்த ஆண்டு முழுவதும் இந்திய அணியினர் ஓய்வில்லாமல் விளையாட உள்ளனர். இந்த ஆண்டில் டி20 உலக கோப்பை தொடரும் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
டி20 உலக கோப்பைக்கு முன்பு திட்டம்
இந்நிலையில், இந்த தொடருக்கு முன்னதாகவே நியூசிலாந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர்களில் விளையாட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இந்த தொடர் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது டி20 உலக கோப்பைக்கு முன்னதாகவே இந்த தொடர் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.