நியூசிலாந்து முதலில் தடுமாற்றம்
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தன் முதல் இன்னிங்க்ஸில் 153 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தனியாளாக போராடி 63 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் பந்துவீச்சு பலமாக இருந்ததால் நியூசிலாந்து அணியினர் தடுமாறினர்.
பாகிஸ்தான் 227 ரன்கள் எடுத்தது
அடுத்து தன் முதல் இன்னிங்க்ஸை ஆட வந்த பாகிஸ்தான் அணி 227 ரன்கள் எடுத்தது. பாபர் ஆசாம் 62, ஆசாத் ஷாபிக் 43 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்க்ஸில் கோட்டை விட்ட நியூசிலாந்து இரண்டாம் இன்னிங்க்ஸில் போராடி 249 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தானுக்கு சிறிய இலக்கு
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, எளிதில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 37 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது.
விக்கெட்கள் சரிவு
நான்காம் நாள் ஆட்டத்தின் துவக்கத்தில் 48 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்த பாகிஸ்தான் அணி, பின் அசார் அலி, ஆசாத் ஷாபிக்கின் பொறுப்பான ஆட்டத்தால் சுதாரித்தது. ஆசாத் ஷாபிக் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் அணி 130 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து இருந்தது. அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழத் துவங்கின.
நியூசிலாந்து வெற்றி பெற்றது
நியூசிலாந்து அணியில் தன் முதல் போட்டியில் ஆடும் அஜாஸ் பட்டேல் வரிசையாக விக்கெட்களை அள்ளினார். 5 விக்கெட்கள் வீழ்த்திய அவர், கடைசி வரை பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என நம்பிக்கை அளித்து வந்த அஸார் அலியையும் வீழ்த்தி, பாகிஸ்தான் அணி 171 ரன்களுக்கு ஆட்டமிழக்க காரணமாக இருந்தார். இதையடுத்து, நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விறுவிறுப்பான டெஸ்ட் போட்டி
டெஸ்ட் போட்டி என்றால் "பயங்கர போர்" என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், அதை உடைத்துள்ளது இந்த போட்டி. நான்காம் நாளின் பாதியில் இருந்து இந்த டெஸ்ட் போட்டி ஒரு விறுவிறுப்பை அடைந்தது. கடைசி 15 ஓவர்களில் விக்கெட்கள் விழுந்ததால், ரன்கள் எடுக்காவிட்டாலும் சுவாரஸ்யமாக இருந்தது. இந்த தோல்வியால் பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள்.