பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல்லின் 38வது லீக் போட்டி நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற நிலையில், அதில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
28 பந்துகளில் 53 ரன்கள்
இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார் அணியின் நிகோலஸ் பூரன். 28 பந்துகளில் அவர் அடித்த அரைசதம் அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளது. போட்டியில் காகிசோ ரபடாவின் பந்தில் அவுட் ஆவதற்கு முன்பு அவர் அடித்த 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸ்கள் ரசிகர்களை கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியது.
சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
இந்நிலையில் பூரனின் ஷாட்கள் அதிரடியாக இருந்ததை குறிப்பிட்டு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது சில ஷாட்கள் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜேபி டூமினியை நினைவுப்படுத்தியதாகவும் சச்சின் குறிப்பிட்டுள்ளார். டூமினி ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடியவர்.
2 அரைசதங்கள்
இந்த ஐபிஎல் போட்டியில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள நிகோலஸ் பூரன் 295 ரன்களை ஸ்டிரைக் ரேட் 183.22டுடன் அடித்துள்ளார். இந்த சீசனில் 77 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளார். மேலும் 2 அரைசதங்களையும் பூர்த்தி செய்துள்ளார். 21 பவுண்டரிகள் மற்றும் 22 சிக்ஸ்களையும் விளாசியுள்ளார்.