மும்பை:ஐபிஎல் கோப்பையுடன் கோயிலுக்கு சென்ற மும்பை அணியின் உரிமையாளர் நிதா அம்பானி கடவுளுக்கு நன்றி சொல்லும் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் களம் கண்ட ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது. கோப்பையையும் 4வது முறையாக தட்டிச் சென்றது. வெற்றிக் கோப்பையுடன் சொந்த ஊர் திரும்பிய மும்பை அணிக்கு ரசிகர்கள் 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு வரவேற்பளித்தனர்.
போட்டியின் முக்கிய தருணமான அந்த 20வது ஓவரில் அரங்கத்தில் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளரான நிதா அம்பானி பார்த்து கொண்டிருந்தார். தமது கையில் வைத்திருந்த பையில் இருந்த ஏதோ ஒன்றை எடுத்து வேண்டிக் கொண்டார். கண்களிலும், கைகளிலும் அதை ஒத்திக் கொண்டு மனமுருக மந்திரங்கள் சொல்லி பிரார்த்தித்தார்.
அவரின் இந்த பிரார்த்தனை தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாக சக்கை போடு போட்டது. மந்திரம் சொன்னார்... அதனால் தான் மும்பை கோப்பையை வென்றது.. அவரை உலக கோப்பை நடைபெறும் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தால் இந்தியா சாம்பியனாகும் என்று மீம்சுகளும் ரவுண்டு கட்டின.
இப்போது அதற்கு போட்டியாக மற்றொரு வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது தமது அரண்மனையின் உள்ளே இருக்கும் கோயிலில் ஐபிஎல் கோப்பையுடன் வெறும் கால்களுடன் உள்ளே நுழையும் நிதா அம்பானி மந்திரம் சொல்லிக் கொண்டே சென்று கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்.
🙏🏻🏆 #OneFamily pic.twitter.com/1Dq0K09U2S
— Mumbai Indians (@mipaltan) May 14, 2019
மந்திரங்கள் கூறியபடியே மிகவும் பவ்யமாக கோப்பையை பிரகாரத்தில் வைத்து அவர் சாமி கும்பிடுகிறார். பாடல்கள் பாடி.. கடவுளுக்கு நன்றி சொல்லும் அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. வழக்கம் போல இந்த வீடியோவுக்கும் மீம்ஸ் வரலாம் என்று எதிர்பார்க்கலாம்.