ஐபிஎல் ஏலத்தில்..
2015 ஐபிஎல் ஏலத்தில் நிதிஷ் ராணாவை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதன் பின் 2016 மற்றும் 2017இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடினார் அவர். 2018இல் அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2018 மற்றும் 2019ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களுள் ஒருவராக வலம் வந்தார் நிதிஷ் ராணா. அவரது அதிரடி பேட்டிங் அப்போது கவனிக்கப்பட்டது. இந்திய அணியில் இடம் பெறும் தகுதி கொண்ட பேட்ஸ்மேனாகவே பார்க்கப்படுகிறார் நிதிஷ் ராணா.
நம்பிக்கை இருந்தது
தான் ஐபிஎல் தொடரில் தேர்வு செய்யப்பட்ட செய்தியை அறிந்த போது என்ன நடந்தது என்பது பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறி உள்ளார். "2015இல் தான் ரஞ்சி தொடரில் ஆடி வந்தேன். அப்போது ஐபிஎல் ஏலத்தில் என்னை தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது."
நம்பவில்லை
"ஐபிஎல் ஏலத்தின் போது நான் பேட்டிங் செய்து கொண்டு இருந்தேன். அப்போது இடைவேளையின் போது நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. நான் அதை நம்பவில்லை. என் நண்பர் ஜோக் அடிக்கிறார் என நினைத்தேன். அவர் அழுத்திக் கூறிய போது அவர் ஜோக் அடிக்கவில்லை என எனக்கு புரிந்தது" என்றார்.
சச்சின்
அடுத்து, சச்சின் தன்னை கவனித்ததாகவும், அது தனக்கு ஊக்கம் அளித்தாகவும் கூறினார். "என் நண்பர் ஒருமுறை சச்சினும், மும்பை இந்தியன்ஸ் மேலாளர் ராகுல் சிங்வியும் பேசிக் கொள்வதை கேட்டுள்ளார். அப்போது சச்சின் "யார் இந்தப் பையன்?" எனக் கேட்டுள்ளார். அவர் என்னை கவனித்து இருக்கிறார். அது எனக்கு நல்ல உணர்வை அளித்தது" என்றார்.
பாண்டிங் அறிவுரை
அதன் பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் 2016இல் ஆடிய போது குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான முக்கிய போட்டி ஒன்றில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அளித்த அறிவுரைகள் தன் ஆடும் விதத்தை மாற்றி அமைத்ததாக கூறினார். அந்தப் போட்டிக்கு பின்தான் தான் தனக்கு நம்பிக்கை வந்ததாகவும் அவர் கூறினார்.
என்ன சொன்னார் ரிக்கி பாண்டிங்?
அந்தப் போட்டியின் போது ரிக்கி பாண்டிங், "தடுத்து மட்டும் ஆடாதே. உன்னிடம் அடித்து ஆடும் திறமை உள்ளது. பந்தை நன்றாக அடித்து ஆடு." என கூறி உள்ளார். அந்தப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய நிதிஷ் ராணா 36 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார்.
சந்தேகப்படவில்லை
"அந்தப் போட்டி என்னிடம் இருந்து அனைத்தையும் மாற்றியது. அதன் பின் நான் இந்த அளவுக்கு தகுதியானவனா என என்னை நானே சந்தேகப்படவில்லை." என தனக்கு அந்தப் போட்டி நம்பிக்கை அளித்ததை பற்றி கூறினார் நிதிஷ் ராணா.