ஆண்டின் முதல் பேட்டி
இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2014 முதல் விளங்கி வரும் ரவி சாஸ்திரி இந்திய அணி மற்றும் அதன் விருப்பங்கள், கனவுகள் குறித்து ஆண்டின் முதல் நாளில் தன்னுடைய மனம் திறந்த பேட்டியை அளித்துள்ளார்.
கோலியின் டெஸ்ட் போட்டி ஆசை
உலகெங்கிலும் அதிக பணத்தை அள்ளித்தரும் லீக் போட்டிகளில் விளையாட விருப்பம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளை விளையாட ஆர்வம் காண்பிப்பதாகவும், அதுவே சவாலான விஷயம் என்று அவர் கூறுவதாகவும் ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களின் ஈடுபாடு
இளைஞர்களிடமும் டெஸ்ட் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் காணப்படுவதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார். டெஸ்ட் விளையாட்டுகளை ஆட எந்த அணி வீரராக இருந்தாலும் அவர்கள் விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க போட்டியில் தெளிவு
டெஸ்ட் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர்கள் பலம் குறித்து தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியின் போதுதான் தாங்கள் உணர்ந்ததாகவும் ரவி சாஸ்திரி குறிப்பிட்டார்.
ஒத்துழைப்பு அவசியம்
பேட்டிங்கோ அல்லது பந்துவீச்சோ எதுவானாலும், வீரர்கள் ஒத்துழைப்புடன் கூட்டு முயற்சியாக ஆட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
அனுபவங்களே வழிநடத்தும்
இதுவரை தான் முழுமையான கேப்டனை சந்திக்கவில்லை என்றும், அனைவரிடமும் நிறை குறைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ரவி சாஸ்திரி, அந்தந்த சூழல்கள் தரும் அனுபவங்களே ஒரு கேப்டனை வழிநடத்தும் என்றும் தெரிவித்தார்.
கோலி குறித்து ரவி சாஸ்திரி பெருமிதம்
இந்திய கேப்டன் விராட் கோலி நாள்தோறும் தன்னுடைய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் நடைபோட்டு வருவதாகவும் ரவி சாஸ்திரி கூறினார். கிரிக்கெட்டில் அவரது ஆர்வம், திறன் மதிப்பிட முடியாதது என்று தெரிவித்த அவர், கிரிக்கெட் உலகிற்கு கோலி எடுத்துவரும் திறனை மற்றவர்களிடம் தான் கண்டதில்லை என்றும் கூறினார்.
இளைஞர்களிடமும் யோசனை
இந்திய அணியை முன்னேற்றும் வகையில் ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருவதாகவும், அதில் இளம் வீரர்களுக்கும் யோசனை கூற அனுமதி உண்டு என்றும் கூறிய சாஸ்திரி, இறுதியில் கேப்டனுடன் இணைந்து, அணிக்கு தேவையான முன்னேற்றங்களை தான் இறுதி செய்வதாகவும் தெரிவித்தார்.
இந்திய அணியின் அங்கமே
தன்னை குறித்து சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை இந்திய அணியின் ஒரு அங்கமாகவே தான் பார்ப்பதாகவும், பல ஆண்டுகளாக இதில் எந்த மாற்றத்தையும் தான் பார்க்கவில்லை என்றும் கூறிய ரவி சாஸ்திரி, எல்லா நேரங்களிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஆர்வமே இத்தகைய விமர்சனங்களை ரசிகர்கள் அளிப்பதற்கு காரணமாக உள்ளதாகவும் மேலும் கூறினார்.