சௌதாம்ப்டனில் 8ம் தேதி துவக்கம்
சர்வதேச அளவில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புடன் வரும் 8ம் தேதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சௌதாம்ப்டனின் ரோஸ் பௌல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வீரர்கள் விரைவில் தயாராவார்கள்
இந்த தொடரில் கிரிக்கெட் வர்ணனை செய்யவுள்ள முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இயான் பிஷப், இந்த தொடர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ரசிகர்கள் இல்லாத மைதானங்களில் விளையாடுவதற்கு வீரர்கள் தங்களை கூடியவிரைவில் தயார் படுத்திக் கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மைதானத்தில் ரசிகர்கள் அவசியமில்லை
இந்த தொடரின் போட்டிகளில் தரம் இருந்தால் ரசிகர்கள் மைதானத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்தார். தரமான போட்டிகளை நாம் தரும் பட்சத்தில் தொலைக்காட்சி வாயிலாகவே ரசிகர்கள் தங்களது ஆதரவை அதிகளவில் அளிப்பார்கள் என்றும் அனைவரும் அதை அதிகளவில் பார்ப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
பௌலர்களுக்கு ஆதரவான பிட்ச்கள்
பந்தை ஷைன் செய்ய எச்சில் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையால் கண்டிப்பாக பௌலர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் இயான் பிஷப் தெரிவித்துள்ளார். மாற்றாக வியர்வையை பயன்படுத்தலாம் என்றாலும் சில நாடுகளில் குளிர்ச்சியான சூழல் நிலவும்போது, வியர்வை என்பது கேள்விக்குறியாகி விடும் என்றும் பிஷப் தெரிவித்துள்ளார். இதை தவிர்க்க பௌலர்களுக்கு சாதகமான பிட்ச்களை உருவாக்கலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தன்னை பற்றி அதிகமாக பேசமாட்டார்
கடந்த புதன்கிழமை மறைந்த மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் எவர்டன் வீக்சை, தான் முதன்முதலில் ஸ்டான்போர்ட் தொடரில் சந்தித்து பேசியதாகவும், அவ்வளவு திறமை மற்றும் சாதனைகளை கொண்டவராக இருந்தாலும் அவர் எப்போதும் தன்னை பற்றி பேசாமல் மற்ற வீரர்களின் சாதனைகள் குறித்தே அதிகமாக பேசுவார் என்றும் மெய்சிலிர்த்து பேசினார் பிஷப்.