சென்னை: ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு குஜராத் லயன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட் அணிகள் பங்கேற்கப்போவதில்லை. சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு வழிவிட்டு இந்த அணிகள் ஓரம் கட்டப்படுகின்றன.
ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொதுவாக இதில் 8 அணிகள் பங்கேற்பதையே ஐபிஎல் நிர்வாகம் விரும்புகிறது. முறைகேடு புகார்களால் 2 வருடங்களுக்கு ஆட தடை விதிக்கப்பட்ட சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அடுத்த ஆண்டு தகுதி பெற்று ஆட வருவதால், இவ்விரு ஆண்டுகளிலும் புதிதாக உதயமாகி ஆடி வரும் குஜராத் மற்றும் புனே அணிகளுக்கு விடை கொடுக்க உள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
இதை வெப்சைட் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், குஜராத் அணி உரிமையாளர் கேசவ் பன்சால் உறுதிப்படுத்தியுள்ளார். "புனே மற்றும் குஜராத் அணிகளை அதன் உரிமையாளர்கள் வாங்கும்போதே, இவை இரண்டு வருடங்களுக்கு மட்டுமேயான அணிகள்தான் என்பது எங்களுக்கு தெரியும்" என்று கேசவ் பன்சால் கூறியுள்ளார்.
சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் டோணியே செயல்படுவார் என்று ஏற்கனவே சீனிவாசன் தெரிவித்துள்ளார். எனவே அவரது தலைமையில் பழைய சிஎஸ்கே வீரர்கான ரெய்னா, பிராவோ, ஜடேஜா உள்ளிட்டோர் மீண்டும் சென்னைக்காக களமிறங்க உள்ளனர் என தெரிகிறது. அப்போ அடுத்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்சுக்கு உண்மையிலேயே பெரிய விசிலா அடிக்கலாம்தானே.