அருகருகே
இந்திய வீரர்களும், பாகிஸ்தான் வீரர்களும் கூப்பிடு தொலைவில்தான் பயிற்சி மேற்கொண்டனர். இருப்பினும் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவில்லை, பேசிக் கொள்ளவில்லை.
இரண்டரை மணி நேரம்
பதுல்லா, கான் சாஹேப் உஸ்மான் அலி ஸ்டேடியத்தில் நேற்று மாலை 4 மணி முதல் ஆறரை மணி வரை பயிற்சி நடந்தது. இரு தரப்பும் அவரவர் பயிற்சியில் மட்டும் கவனமாக இருந்தனர்.
இதுவரை இப்படி இல்லை
இதுவரை இரு தரப்பும் இப்படி இருந்ததில்லை. தள்ளித் தள்ளி பயிற்சி மேற்கொண்டாலும் கூட இரு தரப்பு வீரர்களும் கலந்துரையாடத் தவறியதில்லை. ஆனால் பக்கத்துப் பக்கத்தில் பயிற்சி மேற்கொண்டும் கூட இரு தரப்பும் பேசிக் கொள்ளாதது ஆச்சரியமாக இருந்தது.
அப்பெல்லாம் எப்படி தெரியுமா?
80கள், 90களில் இப்படி இருந்ததில்லை. அப்போது இரு அணிகளும் போட்டிகளில் அனல் பறக்க மோதிக் கொள்வார்கள். குறிப்பாக மியான்தத் பேட் செய்யும்போது கபில் தேவ் பந்து வீச்சில் அனல் பறக்கும். அதேபோல கபில் பேட் செய்யும்போதும் பாகிஸ்தான் தரப்பு தீப்பொறி பறக்க பந்து வீசும்.
கலகலப்பு கலந்துரையாடல்
இருப்பினும் போட்டிக்கு முன்பாக நடக்கும் வலைப் பயற்சியின்போது திலீப் வெங்சர்க்கர், கபில் தேவ், மியான்தத் ஆகியோர் கண்டிப்பாக கலந்துரையாடலில் ஈடுபடாமல் கலைந்து போக மாட்டார்கள். அவ்வளவு இயல்பாக, ஜாலியாக பேசிக் கொள்வார்கள். அதேபோல வாசிம் அக்ரம், சச்சின் டெண்டுல்கர், அஸாருதீன் என பிந்தைய வீரர்களும் இயல்பான கலந்துரையாடலில் மறக்காமல் ஈடுபடுவார்கள்.
ஏன் இந்த மெளனம்?
இந்த நிலையில் இப்போது ஏன் வீரர்களிடையே மெளனம் தலை தூக்கியது என்று தெரியவில்லை. ஒரு வேளை இந்தியாவில் வந்து பாகிஸ்தான் விளையாடுவது தொடர்பாகவும், பாகிஸ்தானுக்குப் போய் இந்தியா விளையாடி வருவதிலும் நிலவும் சிக்கல் தொடர்பாக இரு தரப்பும் அமைதி காப்பதாக கருதப்படுகிறது.
இந்தியாவைக் கெஞ்சக் கூடாது
இந்தியாவை இனியும் கெஞ்சிக் கொண்டிருக்கக் கூடாது, நம்பக் கூடாது என்று பல்வேறு முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறார்கள் என்பது நினைவிருக்கலாம்.
அனல் பறக்கும்
இந்தப் பின்னணியில் இரு அணிகளும் இன்று இரவு 7 மணிக்குத் தொடங்கும் போட்டியில் மோதவுள்ளன. அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.