கட்டாக்: கட்டாக்கில் நேற்று இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 2வது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த, இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், தென் ஆப்பிரிக்கா பேட் செய்துகொண்டிருந்தபோது, மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டு மீண்டும், தொடங்கியது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதுகுறித்து, தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் கூறியதாவது: சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் நான் பார்த்ததில் மிகச்சிறந்த பந்து வீச்சாக தென் ஆப்பிரிக்க வீரர்களின் பந்து வீச்சை கருதுகிறேன்.
அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டதை பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது. இந்தியாவை அதன் மண்ணில், 2-0 என்ற கணக்கில் வென்று இருப்பது மிகப்பெரும் சாதனை. இதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
நான் ஐந்தாறு ஆண்டுகளாக இந்தியாவில் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இங்கு நடைபெற்ற (பாட்டில் வீச்சு) சம்பவம் கிரிக்கெட் போட்டிக்கு அழகானதல்ல. இந்த சுற்றுப்பயணத்தில் இதுதான் முதலும் கடைசியாகவும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். என்று தெரிவித்தார்.