சிராஜ்மீது இனவாத தாக்குதல்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கடந்த போட்டியின்போது முகமது சிராஜ் மீது ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இனவாத தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து சிராஜ் புகார் அளித்த நிலையில், அவர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியது.
ஆஸ்திரேலிய வீரர்கள் கண்டனம்
இந்த விவகாரம் சர்வதேச அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆஸ்திரேலிய வீரர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இனவாதத்திற்கு இடமில்லை
இந்நிலையில் கிரிக்கெட் என்பது அனைவருக்குமான விளையாட்டு என்றும் இதில் இனவாதத்திற்கு இடமில்லை என்றும் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லியோன் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் அருவருப்பானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
தானும் பாதிக்கப்பட்டதாக லியோன் குற்றச்சாட்டு
இதை விளையாட்டாக நினைத்து மக்கள் செய்வதாகவும் ஆனால் சம்பவப்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் லியோன் சுட்டிக் காட்டினார். இதுபோன்ற துஷ்பிரயோகத்திற்கு தானும் ஆளானதாகவும் குறிப்பிட்ட லியோன், சிலர் இதை புறக்கணிப்பார்கள் என்றும் சிலர் புகார் அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.