வெளிநாட்டினர் நுழைய தடை
வரும் அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதிவரை ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டி20 உலக கோப்பை தொடர் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாதத்திற்கு தள்ளிவைப்பு
இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரை அடுத்த ஆண்டு அல்லது 2022ல் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டி20 உலக கோப்பை குறித்து முடிவெடுக்க கடந்த மாதத்தில் கூடிய ஐசிசி நிர்வாகிகள் குழு, அதுகுறித்த முடிவை இந்த மாதம் 10ம் தேதி கூட்டத்தில் எடுக்கவுள்ளதாக தெரிவித்தது. ஆயினும் கடந்த 10ம் தேதி நடைபெற்ற கூட்டத்திலும் முடிவெடுக்கப்படவில்லை. இந்த முடிவை அடுத்த மாதத்திற்கு தற்போது தள்ளி வைத்துள்ளது ஐசிசி.
ஐபிஎல் தொடரும் கேள்விக்குறி
டி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடர் குறித்து ஐசிசி எந்த முடிவும் எடுக்காததால் ஐபிஎல் நடத்தப்படுவதும் கேள்விக்குறியாகி வருகிறது. ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதே சர்வதேச அளவில் பல்வேறு வீரர்களின் கோரிக்கையாக உள்ளது.
ரிச்சர்ட்சன் வரவேற்பு
இந்நிலையில், டி20 உலக கோப்பை குறித்த முடிவை தள்ளிவைத்துள்ள ஐசிசியின் தீர்மானம், வரவேற்கத்தக்கது என்று ஆஸ்திரேலிய பௌலர் கேன் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கும் நிலையில், அதுகுறித்து அப்போது முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் எந்தவித அவசரமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.