பிளே -ஆப் முதல் அணி
ஐபிஎல் 13வது சீசனின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து 4 அணிகள் பிளே-ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது. பிளே-ஆப் சுற்றிற்கு முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள தகுதிச்சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் மோதவுள்ளது.
போல்ட், பும்ராவிற்கு ஓய்வு
நேற்றைய ஐபிஎல் லீக் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் முக்கிய பௌலர்கள் டிரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோருக்கு அளிக்கப்பட்ட ஓய்வு பார்க்கப்படுகிறது.
அணிகள் தயாராக இல்லை
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் மற்றும் பௌலிங் ஆர்டரை பார்த்து மற்ற அணிகள் மிரண்டுள்ளதாகவும் அந்த அணியுடன் போட்டியிட எந்த ஐபிஎல் அணியும் தயாராக இல்லை என்றும் மும்பை இந்தியன்சின் பௌலிங் கோச் ஷேன் பாண்ட் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கீரன் பொல்லார்ட் சிறப்பு
தொடரின் ஆரம்பம் முதலே மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம் செலுத்தி வருவதை சுட்டிக் காட்டியுள்ள பாண்ட், அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக உள்ளதாகவும், அதில் கூடுதல் போனசாக கீரன் பொல்லார்ட் அமைந்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரிலாக்சான போட்டி
தொடர்ந்த போட்டிகளில் விளையாடிவந்த பும்ரா மற்றும் போல்ட் ஆகியோருக்கு கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டதாகவும் அதுவும் நேற்றைய போட்டியின் தோல்விக்கு காரணம் என்றும் பாண்ட் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிளே-ஆப்பிற்கு தகுதிபெற்றுள்ளதால் தொடரில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் ரிலாக்சாக விளையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.