சிட்னி : டி20 உலக கோப்பையில் இப்படியொரு ஏமாற்றமான அரையிறுதிப்போட்டியை எதிர்பார்க்கவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் ஹெதர் நைட் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அரையிறுதி வரை வருவோம் என்று எதிர்பார்த்தோம் என்றும் அது நிறைவேறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முதல் போட்டியில் பெற்ற தோல்வியே இதற்கு காரணம் என்றும் அந்தப் போட்டியில் வெற்றியை தக்க வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீராங்கனைகளில் 3வது மற்றும் 4வது இடத்தில் தானும் தன்னுடைய அணியின் மற்றொரு வீராங்கனை நடாலி ஸ்சீவரும் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இப்படியொரு அரையிறுதிப்போட்டியை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் மழை காரணமாக தாங்கள் அரையிறுதிப்போட்டியுடன் தொடரிலிருந்து விலகியுள்ளது மிகுந்த விரக்தியை அளிப்பதாகவும் இங்கிலாந்து கேப்டன் ஹெதர் நைட் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் ரிசர்வ் நாள் இல்லாததால் மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைக்காததை சுட்டிக்காட்டிய ஹெதர் நைட், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் பெற்ற தோல்வி தற்போது வரை துரத்தி வருவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் இந்திய அணி ஏ பிரிவிலும் இங்கிலாந்து பி பிரிவிலும் இடம்பெற்று ஆடிவந்த நிலையில், முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதிய இங்கிலாந்து மகளிர் அணி தோல்வி அடைந்தது. இதனிடையே, தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று பி பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
அரையிறுதிப் போட்டி வரை வருவோம் என்ற நம்பிக்கை இருந்தது என்று குறிப்பிட்டுள்ள ஹெதர் நைட், அதன்படி அரையிறுதிக்கு தேர்வானதை சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் வானிலை காரணமாக தங்களுடைய இறுதிப்போட்டி கனவு தகர்ந்துள்ளதாகவும், போட்டியில் ஒரு பந்தை கூட ஆடாமல் வெளியேறியுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் முதல் போட்டியிலேயே வெற்றிக் கணக்கை துவக்க வேண்டும் என்பதை இந்த தோல்வி உணர்த்தியுள்ளதாகவும் ஹெதர் நைட் நகைச்சுவையோடு கூறினார். முதலில் தோல்வியை அடைந்ததால், அந்த தோல்வி தற்போதும் நீடிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தொடரில் நடாலி ஸ்சீவர் தனித்துவமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தியதாகவும் தொடரில் 3வது மற்றும் 4வது இடத்தை தானும் நடாலியும் பிடித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றும் ஹெதர் நைட் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான இந்த அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று நேற்று ஹெதர் நைட் தெரிவித்திருந்தார். மழையே வந்தாலும் அதையும் சமாளித்து ஆளும் திறமைமிக்க பேட்ஸ்வுமன்கள் தங்களது அணியில் உள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்திருந்தார்.
ஐசிசி விதிமுறைகளின்படி போட்டிகளில் மோதும் இரு அணிகளும் தலா 10 ஓவர்களிலாவது விளையாடி இருக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால், இதில் மாற்றம் ஏற்பட்டால் போட்டி ரத்து செய்யப்படும். இதுவே இன்றைய போட்டியில் நிகழ்ந்தது. மழை காரணமாக இரு அணிகளும் ஒரு பந்தையும் வீசாதநிலையில், போட்டி ரத்து செய்யப்பட்டு, புள்ளிகள் அடிப்படையில் இந்தியாவிற்கு இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.