உருட்டிய பண்ட்
ரோஹித் ஷர்மா, கில், புஜாரா, கோலி, ரிஷப் பண்ட் என்று அதிகம் எதிர்பார்த்த பேட்ஸ்மேன்ஸ் அனைவரும், சவுத்தாம்ப்டன் பிட்சில் எந்தவித போராட்டமும் இன்றி சரண்டர் ஆனார்கள். பவுலிங்கில் ஷமி, அஷ்வின் தவிர திருப்தி கொள்ளும் அளவுக்கு யாரும் செயல்படவில்லை. குறிப்பிட்டு ஒருவரை மட்டும் சொல்லவேண்டுமெனில், ரிஷப் பண்ட். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கும் முன்பு, கவாஸ்கர் முதல் சடகோபன் ரமேஷ் அவரை அனைவரது 'X-Factor' பிளேயர் சாய்ஸாக இருந்தது ரிஷப் தான். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் 40+ ரன்கள் வரை தட்டி தட்டி தப்பிப் பிழைத்து நின்றதைத் தவிர அவரால் பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை.
ஆர்சிபி அணியில்
அதேசமயம், நியூசிலாந்தின் யாரும் எதிர்பார்க்காத 'X-Factor' வீரராக இருந்தவர் கைல் ஜேமிசன். மொத்தம் 7 விக்கெட்டுகள். முதல் இன்னிங்ஸில் 5 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் என இந்தியாவை இரு இன்னிங்ஸிலும் நிலை குலைய வைத்தவர் ஜேமிசன் தான். அதுமட்டுமின்றி, இந்திய கேப்டன் விராட் கோலியை இரு இன்னிங்ஸிலும் வீழ்த்தியது இவர் தான். குறிப்பாக, இவர் ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார்.
மறுத்த ஜேமிசன்
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் போது, வலைப்பயிற்சியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட டியூக் பந்துகளைக் கொண்டு ஜேமிசனை பந்து வீசச் சொல்லி கோலி பயிற்சி செய்ததாக, அதே பெங்களூரு அணியில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் டேன் கிறிஸ்டியன் கடந்த மாதம் தெரிவிக்க, செய்தி வைரலானது. இந்நிலையில், இந்த தகவலை ஜேமிசன் தற்போது மறுத்துள்ளார்.
கோலி அப்படி கேட்கல
இதுகுறித்து ஜேமிசன் அளித்துள்ள பேட்டியில், "ஒரு நல்ல கதைக்கு சுவாரஸ்யத்தை சேர்க்கும் நோக்கில், டேன் கிறிஸ்டியன் அவ்வாறு சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஐபிஎல் தொடக்கத்தில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் குறித்தும், எதிர்வரவுள்ள தொடர்கள் குறித்தும் பேசினோம். அப்போது டியூக் பந்துகள் குறித்தும் பேசினோம். பயிற்சி குறித்து பேசினோம். ஆனால், டியூக் பந்துகளை வீசச் சொல்லி அவர் எதுவும் கேட்கவில்லை. இது ஒரு மிகச் சிறந்த கற்பனை கதையாகும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.