5 விக்கெட்ஸ்
முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி தான் டாஸ் போடப்பட்டு இப்போட்டி தொடங்கப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
மாறி மாறி தாக்குதல்
இந்நிலையில், நேற்று (ஜூன் 21) நான்காவது நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் ஒருமணி நேரம் தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், இதில் இந்திய பவுலர்கள் மிகச் சிறப்பாக வீசி வருகின்றனர். இஷாந்த் அதிக ஸ்விங் பந்துகளை வீச, ஷமி ஸ்விங் மற்றும் வேகம் என இரண்டிலும் நியூசிலாந்து வீரர்களை கார்னர் செய்தார். பும்ராவை பொறுத்தவரை, ஸ்விங் பெரிதாக இல்லை. ஆனால், ரிதம் இருந்தது. ஓரளவுக்காவது.
செம லைன் அண்ட் லெந்த்
இதில், டாப் ஹீரோ ஷமி எனலாம். லன்ச் வரை அவர் வீசிய அத்தனை ஓவர்களிலும் அத்தனை வேகம் இருந்தது. லைன் அண்ட் லெந்த் இருந்தது. அவர் வீசிய முதல் ஓவரிலேயே அந்த லெந்தை அவர் பிடித்துவிட்டார் எனலாம். முதல் ஓவரில் பந்துகள் அட்டகாசமாக அவுட் ஸ்விங் ஆகின. அந்த லைன் அண்ட் லெந்தை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஷமி டெய்லரை 11 ரன்னில் காலி செய்து, வாட்லிங்கை வெறும் 1 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றினார்.
ஆல் அவுட்?
அதேபோல், ஹென்றி நோகோல்ஸை 7 ரன்களில் இஷாந்த் எட்ஜ் ஆக வைத்து ரோஹித் கைகளுக்கு பந்தை பரிசளித்தார். ஸோ, முதல் செஷனில் அந்த அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக, 135 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து, அதாவது தனது அணியின் பாதி வீரர்களை இழந்திருக்கும் நியூசிலாந்து அணியை விரைவில் ஆல் அவுட் செய்ய இந்திய அணிக்கு அபார வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் இந்த அபார பவுலிங்கிற்கு மிக முக்கிய காரணம், விராட் கோலியின் டிப்ஸ் என்று கூறலாம். அதாவது, மூன்றாவது நாளில் இந்திய பவுலர்கள் பந்துகளை ஸ்விங் செய்யாத நிலையில், இன்று நிச்சயம் அதனை முயற்சி செய்ய வேண்டும் என்று கோலி வலியுறுத்தியதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, மூன்று ஓவருக்கு ஒரு பவுன்ஸ் நிச்சயம் இருக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளதாம்.