என்ன நடந்தது?
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆமிர் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். அப்போது முதல் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆமிர், ஆமிர் என முழக்கமிட்ட வண்ணம் இருந்தனர்.
மிரட்டல்
எனினும், அவர் முதல் விக்கெட்டை எடுத்த நிலையில், அடுத்த மூன்று விக்கெட்களை சாய்த்து நியூசிலாந்து அணியை மிரட்டி, நிலைகுலைய வைத்தார் ஷஹீன் ஷா அப்ரிடி. உடனே, ரசிகர்கள் ஷஹீன் ஷா பக்கம் சாய்ந்து இணையத்தில் அவரை புகழ்ந்து தள்ளினர்.
3 முக்கிய விக்கெட்கள்
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் கோலின் மன்றோ, அதிரடி அனுபவ வீரர் ராஸ் டெய்லர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் லாதம் என மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார் ஷஹீன் ஷா. அப்போது நியூசிலாந்து அணி 46 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து பரிதாபமாக காட்சி அளித்தது.
காரணம் யார்?
ஷஹீன் ஷா மிரட்டலாக பந்து வீச முக்கிய காரணம், பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் போட்டிக்கு முன் சொல்லிக் கொடுத்த வித்தை தான் என தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகள் மூலம் தெரிய வந்தது.
என்ன காட்சி?
போட்டிக்கு முன் ஷஹீன் ஷாவிடம் நீண்ட நேரம் வாசிம் அக்ரம் பந்துவீச்சு குறித்து சொல்லிக் கொடுத்த காட்சிகள் இடம் பெற்றன. வாசிம் அக்ரம் இது பற்றி விளக்கமும் அளித்தார்.
அக்ரம் சொன்னது என்ன?
ஷஹீன் ஷா விக்கெட் வீழ்த்திக் கொண்டு இருந்த போது வர்ணனை செய்து கொண்டிருந்தார் வாசிம் அக்ரம். அவரிடம் என்ன வித்தையை அவருக்கு சொல்லிக் கொடுத்தீர்கள் என கேட்கப்பட்டது. அக்ரம் கூறுகையில், "நான் அவர் பந்து வீசும் நீளத்தை மாற்றுமாறு கூறினேன். அவர் ஷார்ட் பந்துகளை வீசி வந்தார். நான் பந்தை இன்னும் மேலே பிட்ச் செய்து, பேட்ஸ்மேனை அச்சுறுத்துமாறு கூறினேன். அவர் என் அறிவுரையை கேட்டுக் கொண்டது போலத் தான் இருக்கிறது" என்றார்.
நியூசிலாந்து மீண்டது
ஷஹீன் ஷா அப்ரிடி 10 ஓவர்கள் பந்துவீசி 3 மெய்டன் ஓவர்களுடன், 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இவர் சிறப்பாக பந்து வீசினாலும், ஆமிர், வஹாப் ரியாஸ் போன்ற மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்கள் கொடுக்க, நியூசிலாந்து அணியின் நீஷம், கிராண்ட்ஹோம் அணியை 237 ரன்களை எட்டச் செய்தனர்.