மறக்க முடியாத 2004 டெஸ்ட் தொடர்
இந்திய அணி கார்கில் போருக்கு பின் பல ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் தொடரில் 2004இல் ஆடியது. அதுவும் பாகிஸ்தான் மண்ணில் அந்த தொடர் நடைபெற்றது. அது இந்திய அணியின் மறக்க முடியாத தொடரில் ஒன்றாக அமைந்தது.
சேவாக் முச்சதம்
குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் கூட அதிரடி ஆட்டம் ஆடும் துவக்க வீரர் வீரேந்தர் சேவாக் முல்தான் டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து சாதனை செய்தார். இந்திய வீரர் அடித்த முதல் முச்சதம் என்பதால் அது மறக்க முடியாத போட்டியாக மாறியது.
இளம் வீரர்கள் அபாரம்
இர்பான் பதான், லக்ஷ்மிபதி பாலாஜி போன்ற இளம் வீரர்களுக்கு அது மறக்க முடியாத தொடராக அமைந்தது. டெஸ்ட் தொடரில் இருவரும் சிறப்பாக செயல்பட்டு தங்கள் திறமையை வெளிக்காட்டினர். முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருந்தன.
டிராவிட் சுமார் ஆட்டம்
சிறந்த டெஸ்ட் வீரரான டிராவிட் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சுமாராகவே ஆடி இருந்தார். 6, 33 மற்றும் 0 ரன்களே எடுத்து இருந்தார். அதனால் அவர் மீது சிறிது அழுத்தம் இருந்தது. மூன்றாவது டெஸ்டில் அதை தீர்க்கும் தருணம் வந்தது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து, முதல் நாள் முடிவிற்குள் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பாலாஜி 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அடுத்து இந்தியா பேட்டிங் ஆடியது,
சேவாக் அவுட்
முதல் பந்திலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் சோயப் அக்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் வீரேந்தர் சேவாக். முதல் நாள் முடிவில் விக்கெட் விழாமல் காக்கும் பணியை பார்த்திவ் பட்டேல் - ராகுல் டிராவிட் சிறப்பாகவே செய்தனர். டிராவிட் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
நடந்தது என்ன?
அன்றைய தினம் ஹோட்டலில் இரவு உணவு உண்டு கொண்டு இருந்த போது பலரும் அங்கே இருந்தனர். சில பத்திரிக்கையாளர்களும் இருந்தனர். அப்போது டிராவிட் பேட்டிங் குறித்த பேச்சின் போது, டிராவிட் தான் குறைந்த ரன்கள் எடுத்து இருந்தாலும் நன்றாகவே பேட்டிங் ஆடியதாக கூறினார்.
டிராவிட் சவால்
அந்த இடத்தை விட்டு செல்லும் முன் யதேச்சையாக, "நாளை பாருங்க.. நான் செட் ஆகி ஒரு மணி நேரம் பேட்டிங் செய்தால், நான் பெரிய ஸ்கோரை அடிப்பதை பார்க்கப் போகிறோம் என்பதை புரிந்து கொள்வீர்கள்" என சவால் விடுவது போல கூறி உள்ளார்.
இரட்டை சதம் அடித்த டிராவிட்
அடுத்த நாள் அதே போல, ஒரு மணி நேரம் தடுப்பாட்டம் ஆடி தன் விக்கெட்டை காத்த டிராவிட் அதன் பின் சிறப்பாக ஆடி சதம் கடந்தார். தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் தன் சிறப்பான ரன்களான 270 ரன்களை எட்டி அசத்தினார்.
இந்தியா வெற்றி
டிராவிட் ஆட்டம் மூலம் முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 600 ரன்கள் எடுத்தது. அடுத்து பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 245 ரன்கள் மட்டுமே எடுத்து, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 131 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.