நாளை மறுதினம் துவக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டித் தொடர்கள் நாளை மறுதினம் ஒருநாள் போட்டியுடன் துவங்கவுள்ளது. இதையடுத்து இந்திய அணி வீரர்கள் குவாரன்டைன் மற்றும் பயிற்சி போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். அவர்களின் பயிற்சி குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறது.
டிசம்பர் 17ல் துவக்கம்
வரும் 17ம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. முதல் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாடவுள்ள கேப்டன் விராட் கோலி அதையடுதது தனது குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ளார். மேலும் ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மாவின் இருப்பும் இந்த தொடரில் தற்போது கேள்விக்கறியாகியுள்ளது.
2 போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள்
அவர்கள் இருவரும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது என்சிஏவில் அவர்கள் இருவரும் பிட்னஸ் பிரச்சினை காரணமாகவும் குவாரன்டைன் காரணமாகவும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
இஷாந்திற்கு கட்டாயம்
இஷாந்த் சர்மா கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட தற்போது பயணத்தை துவக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் ரோகித் சர்மா தனது 70 சதவிகித பிட்னசை மட்டுமே நிரூபித்துள்ளதால் அவர் வரும் டிசம்பர் 8ம் தேதிவரை என்சிஏவில் இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பிசிசிஐ, சிஏ அரசிடம் கோரிக்கை
இந்நிலையில் அவர்களது குவாரன்டைன் காலத்தை குறைக்க வேண்டும் என்று பிசிசிஐ மற்றும் சிஏ ஆஸ்திரேலிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதன்மூலம் ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது. குவாரன்டைன் விவகாரத்தில் கோரிக்கை விடுப்பது பிசிசிஐக்கு இது முதல் முறையல்ல. முன்னதாக யூஏஇ அரசிடம் குவாரன்டைன் காலத்தை 6 நாட்களாக குறைக்க அது கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.