விமர்சனங்களுக்கு பதிலடி
பாகிஸ்தானும் கத்து குட்டி அணியான அயர்லாந்துடன் தோற்றதால், ஆசியாவின் மிகப்பெரிய 2 அணிகளும் வெளியேறியதால் உலக ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்தனர். இந்த நிலையில் தான் செப்டம்பர் மாதம் டி20 உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் எந்த இரண்டு அணிகள் முதல் சுற்றில் வெளியேறியதோ அந்த அணிகள் மட்டும்தான் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி வரை வந்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தது.
சீனியர்கள் விலகல்
டி20 உலக கோப்பை இளைஞர்களுக்கான தொடர் என்பதால், அதிரடியாக பேட்ஸ்மேன்கள் விளையாட வேண்டும் என்பதற்காக சச்சின் , டிராவிட் , கங்குலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இந்த தொடரில் இருந்து விலகினர்.அப்போது எப்படி 1983 உலக கோப்பை தொடரில் ஹரியானாவில் பிறந்த கபில் தேவை எப்படி கேப்டனாக நியமித்தார்களோ அதே போல் ராஞ்சியில் பிறந்த தோனியை இந்திய அணி கேப்டனாக பிசிசிஐ நியமித்தது.
இளம் படை
தோனி கேப்டனாக மாறினார் என்ற செய்தி அப்போது எவ்வித தாக்கத்தையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தவில்லை. ஆனால் ஒரு ஜாம்பவான் கேப்டன் உருவாகப் போகிறார் என்று யாருக்கும் அப்போது தெரியவில்லை.இந்திய அணியில் முழுக்க முழுக்க இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்து பிசிசிஐ அனுப்பியது.இதனால் ரோகித் சர்மா , ஜோகிந்தர் சர்மா, தினேஷ் கார்த்திக், உத்தப்பா போன்ற வீரர்கள் எப்படி விளையாடுவார்கள் என்று அப்போது யாருக்கும் தெரியாது .
பொறுப்பு கொடுத்த தோனி
இந்த அணியில் ஷேவாக் ,கம்பீர், யுவராஜ், இர்பான் பதான் , ஹர்பஜன் போன்ற சீனியர்களும் இடம் பெற்றனர். துடிப்பும் இளமையும் கலந்த நெருப்பு குழம்பாக இந்திய அணி விளங்கியது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே தோனி அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு பொறுப்பை வழங்கி விட்டார். அதாவது வேகப்பந்துவீச்சாளர்களிடம் இருந்து நான் என்ன எதிர்பார்க்கிறேன், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் என்ன செய்ய வேண்டும்? தொடக்க வீரர்கள் எப்படி ஆட வேண்டும் என்ற பொறுப்பை அவர்களுக்கு உணர்த்திவிட்டார்.
கடைசி ஓவர்
மேலும் 2007 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தோல்விக்கு நாம் பழி தீர்த்து இழந்த பெருமையை மீட்க வேண்டும் என்று ஒவ்வொரு வீரர்கள் மத்தியிலும் வெறியை தோனி உண்டாக்கினார். வந்தால் மலை போனால் குடுமி என்ற யுத்தியில் பயம் அறியாமல் ஒவ்வொரு முடிவையும் தைரியமாக எடுத்தார் தோனி. குறிப்பாக எந்த ஒரு கேப்டனும் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரை அனுபவ வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு தான் கொடுத்திருப்பார் .
தோனியின் முடிவு
ஆனால் தோனி மாற்றி யோசித்தார் .சுழற் பந்துவீச்சை சிக்ஸர் அடிக்க சுலபமாக இருக்கும் என உணர்ந்த தோனி ஜோகிந்தர் சர்மாவுக்கு அந்த பொறுப்பை வழங்கினார். இறுதி ஓவரில் ஓயிடு பந்தை வீசிய பிறகும் தோனி எதைப்பற்றியும் கவலைப்படாமல் பந்து வீசுங்கள் என்று நம்பிக்கை அளித்தார். இதன் மூலமே இந்திய அணி அன்று டி20 உலக கோப்பையை வென்றது.அப்போது அந்த அணியில் இடம் பிடித்த ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தற்போது இந்த தொடரிலும் விளையாடுகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா t20 உலக கோப்பையில் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ரோகித் முடிவு கட்டுவாரா?