மறக்க முடியாத நாள்
பரபரப்பின் உச்சிக்கே சென்ற இந்தப் போட்டியில் இந்திய அணியின் புதிய கேப்டன் தோனியின் வித்தியாசமான முடிவுகள் மற்றும் கேப்டன்சி திறமைகள் முன்னாள் வீரர்களுக்கு ஆச்சரியமளித்தது. கடைசி ஒவரில் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா-உல்-ஹக் சில நிமிடங்கள் இந்திய ரசிகர்களின் இதயதுடிப்பை நிறுத்தி வைத்திருந்தார் என்றே கூறலாம். சிக்ஸர் செல்ல வேண்டிய பந்து ஒரு நிமிடத்தில் ஆட்டத்தையே மாற்றி அமைத்து இந்தியாவின் பக்கம் வெற்றி சென்றது.
கம்பீரின் அதிரடி
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. யூசுப் பதான் (15), உத்தப்பா (8), யுவராஜ் சிங் (14) தோனி (6) என முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால், ஒருபுறம் கவுதம் கம்பீர் நிலைத்து நின்று 54 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 30 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடர்ந்து விக்கெட்
அதன் பிறகு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே வந்தது. முதல் ஓவரிலேயே முகமது ஹபீஸ் ஆட்டமிழக்க, 3-வது ஓவரில் கம்ரான் அக்மல் டக்அவுட்டில் வெளியேறினர். இரு பெரிய விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இந்திய ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஷோயிப் மாலிக், அப்ரிடி ஆகியோரும் ஜொலிக்கவில்லை. அதன் பின்னர் இந்திய அணியின் பக்கம் வெற்றி நகர்ந்தது.
அச்சுறுத்திய மிஸ்பா உல் அக்
நடு வரிசையில் களமிறங்கிய மிஸ்பா-உல்-ஹக், கடைசி ஓவர் வரை பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நம்பிக்கையை விதைத்துக்கொண்டே இருந்தார். அவரின் ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு பரபரப்பை கொடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு இறுதி ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததோடு சாம்பியன்ஷிப்பை வெல்ல 13 ரன்கள் தேவைப்பட்டது.
திக் திக் நிமிடங்கள்
அந்த நேரத்தில் ஒரு ஆச்சரியத்தை நிகழ்த்திய தோனி, பந்தை அனுபவமே இல்லாத ஜோகிந்தர் ஷர்மாவிடம் ஒப்படைத்தார். முதல் இரண்டு பந்துகளை வீணாக்கிய மிஸ்பா, 3-வது பந்தில் அப்சைட் திசையில் சிக்ஸர் அடித்து பரபரப்பை எகிறச் செய்தார். 4-வது பந்தை ஜோகிந்தர் சர்மா வீசும் முன்னர் தோனி அவரிடம் சென்று ஏதோ பேசினார். அதன்பின் நன்கு யோசித்து பார்த்த ஜோகிந்தசர் சிங், மிஸ்பாவின் கால்களுக்கிடையில் ஸ்லோ பாலாக போட்டார். அதனை மிஸ்பா உல் ஹக் ஸ்கூப் ஷாட் அடிக்க முயன்று பின்புறம் தூக்கி அடித்தார். சிக்ஸர் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்டுமேன் திசையில் நின்றிருந்த ஸ்ரீசாந்த் கையில் கேட்ச்சானது. இறுதியாக ஐ.சி.சி டி-20 உலகக் கோப்பையை இளம் வீரர்களை கொண்டிருந்த இந்தியா வென்றது.