சிறப்பான பாதுகாப்பு வளையம்
ஐபிஎல் 2021 தொடரில் கொரோனா புகுந்ததையடுத்து 29 போட்டிகளுடன் இந்த சீசன் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் போட்டிகளை நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஐபிஎல்லில் சிறப்பான பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டிருந்த நிலையிலும் கொரோனா உள் நுழைந்துள்ளது.
மீறப்பட்டது குறித்து கேள்வி
இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கடுமையான பயோ பபுள் எவ்வாறு மீறப்பட்டது என்பது குறித்த விசாரணையை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது. பிசிசிஐ பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
மக்கள் பாதிப்பால் மனஉளைச்சல்
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின்போது சிறப்பான பாதுகாப்பு வளையத்தில் தாங்கள் இருந்ததாகவும் வெளியில் மக்கள் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வருவதை பார்த்தபோது அது மட்டுமே தங்களுக்கு மனஉளைச்சலை தந்ததாகவும் முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய வர்ணனையாளர் தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.
சிறப்பான பாதுகாப்பு
மேலும் தான் சிறப்பான பாதுகாப்பில் இருந்தபோது நொய்டா மற்றும் கொல்கத்தாவில் இருந்த தன்னுடைய குடும்பத்தினர் குறித்த அச்சமும் தனக்கு இருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். கடந்த ஆண்டை காட்டிலும் தற்போதைய சீசனில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
தேற்றிய குடும்பத்தினர்
கொல்கத்தாவில் கொரோனா பாதிப்புகள் அதிகமான நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் தான் மிகவும் அச்சமுற்றதாகவும் அவர் மேலும் கூறினார். ஆனால் அவர்கள் தன்னை தேற்றியதாகவும் அவர் மேலும் கூறினார்.