யுவராஜ் அசத்தியபடிதான் உள்ளார்
அதே நேரம் உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையில் பஞ்சாப் அணிக்காக யுவராஜ் விளையாடி தொடர்ந்து 3 போட்டிகளில் சதங்கள் விளாசி அசத்தியிருந்தார். கடந்த உலக கோப்பையின் தொடர் நாயகனும் யுவராஜ்தான். அப்படியிருந்தும் யுவராஜை அணி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட ஒரு முக்கிய காரணம் உள்ளது.
ஒரே மேட்ச்சில் தலைகீழ்
யுவராஜ்சிங்கை இந்திய கிரிக்கெட் வாரியம் வேண்டாத பிள்ளையாக விரட்டிவிட, 2013ம் ஆண்டு டி20 கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியில் யுவராஜ்சிங் ஆடிய விதம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
கோஹ்லி, ரோகித் அபாரம்
2013ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் ஷர்மா, 26 பந்துகளில் 29 ரன்களும், கோஹ்லி 58 பந்துகளில் 77 ரன்களும் குவித்தனர்.
கடுப்பாகிய ரசிகர்கள்
அடித்து ஆட வேண்டிய இறுதி கட்டத்தில் யுவராஜ்சிங் களமிறங்கினார். ஆனால் ஏனோ தானோ என்று ஆடிய யுவராஜ்சிங்கின் பேட்டில் பல பந்துகள் படாமல் விக்கெட் கீப்பர் வசம் சென்றன. இதனால் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி, டிவியில் கிரிக்கெட் பார்த்த ரசிகர்களும் கடும் கோபத்துடன் பல்லை கடித்தபடி இருந்தனர்.
மட்டமாக அவுட்
21 பந்துகளை சந்தித்த யுவராஜ்சிங், 11 ரன்கள் மட்டுமே எடுத்து குலசேகரா பந்து வீச்சில் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கேப்டன் டோணியால் அதிக பந்துகளை சந்திக்க முடியவில்லை என்பதால், 7 பந்துகளில் 4 ரன்களை டோணி எடுத்திருந்தார்.
ஸ்கோரை சுருக்கிய யுவராஜ்
முக்கியமான பைனல் போட்டியில், யுவராஜ்சிங் ஆடிய ஆமை ஆட்டத்தால் இந்தியா 130 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்பிறகு பேட்டிங் செய்த இலங்கை அணி 13 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து, 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது.
அன்று முதல் இன்றுவரை யூவி இல்லை
இந்திய அணி கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தாலும் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் அப்போது கூறியிருந்தனர். யுவராஜ்சிங்கின் அந்த மோசமான ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் அவர் இதுவரை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.