எச்சில் பயன்படுத்த தடை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்வகையில், அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசியின் கிரிக்கெட் கமிட்டி, பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்த தடை விதிக்க பரிந்துரைத்துள்ளது. இதற்கு வீரர்கள், ஆதரவு தெரிவித்தும், எதிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் போட்டிகளை துவங்குவதற்கு முன்பாக ஐசிசி வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளிலும் இதை அறிவுறுத்தியுள்ளது.
இடைக்கால நடவடிக்கை
இந்நிலையில் வைரஸ் பரவலை தவிர்க்கும்வகையில், பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை இடைக்கால நடவடிக்கை தான் என்று பரிந்துரைகளை செய்த ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். காலம் மாறும்போது இவை அனைத்தும் மாறும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பழைய நிலை திரும்பும்
ஸ்டார் ஸ்போர்ட்சின் 'கிரிக்கெட் கனெக்டட்' நிகழ்ச்சிக்காக பேசிய அனில் கும்ப்ளே, சில மாதங்களிலோ அல்லது ஒரு ஆண்டிலோ கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாம் அனைவரும் விடுபடும்போது, இந்த தடையும் விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அப்போது தடை விதிக்கப்பட்ட வழக்கங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என்றும் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்
பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று உபகரணங்கள் பயன்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மாற்று உபகரணங்களை பயன்படுத்தியதற்காக ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஒருவருட காலம் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதுகுறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.