மும்பை -டெல்லி அணிகள் மோதல்
இன்றைய ஐபிஎல் தகுதிச்சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிச்சுற்றிற்கு முன்னேறும் என்பதால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் தீவிரமாக வெற்றிக்காக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் போட்டியில் சறுக்கல்
ஆரம்பம் முதலே சிறப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது. ஆனால் முந்தைய சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. இதேபோல கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாத டெல்லி கேபிடல்ஸ் அணி கடந்த ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தனது வெற்றிக்கணக்கை துவக்கியுள்ளது.
சிறப்பான பேட்டிங், பௌலிங் ஆர்டர்
இந்நிலையில், இன்றைய தகுதிச்சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். லீக் போட்டிகளின் அனுபவங்களை கொண்டு இதை கணிக்க முடியும் என்றும் மும்பை இந்தியன்ஸ் தங்களது பேட்டிங் மற்றும் பௌலிங் ஆர்டர்களை சிறப்பாக கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறப்பான பங்களிப்பு
அந்த அணியின் கீரன் பொல்லார்ட் உள்ளிட்ட சிறப்பான வீரர்கள் இருந்தாலும் துவக்க ஆட்டக்காரர்களாக அவர்களை இறக்காமல் மிடில் ஆர்டரில் இறக்கும் துணிவு அந்த அணிக்கு உள்ளதாகவும், ஆயினும் துவக்க ஆட்டக்காரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாகவே செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
வீழ்த்துவது கடுமையானது
இதேபோல அணியின் டிரெண்ட் போல்ட் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய வீரர்களின் கைகளில் அணியின் பௌலிங் யூனிட் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய காரணங்களால் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவது மிகவும் கடுமையானது என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
பலப்படுத்திக் கொள்ள வேண்டும்
மேலும் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதும் அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அவர் மோசமாக ஆடியநிலையில் தன்னை பலப்படுத்திக் கொண்டு மீண்டும் விளையாடுவது சிறப்பாக இருக்கும் என்றும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
வியூகம் அமைக்க வேண்டும்
இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி தன்னுடைய தனிப்பட்ட வீரர்களின் திறமைகளை சரியாக பயன்படுத்தி மும்பை அணியை வீழ்த்த வியூகம் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ள ஸ்ரீகாந்த், அணியின் மிடில் ஆர்டர் சிறப்பாக இல்லாததையும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் பௌலிங்கில் ரபடா மற்றும் நார்ட்ஜே ஆகியோர் அணிக்கு பலம் சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
திரில்லிங்காக அமையும்
மொத்தத்தில் இன்றைய போட்டி மிகவும் திரில்லிங்கான அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்கும் என்றும் அதிக ரன் குவிப்பு இன்றைய போட்டிக்கு மிகவும் அவசியம் என்றும் ஸ்ரீகாந்த் மேலும் கூறினார். கடந்த சில லீக் போட்டிகளில் சேசிங் செய்யும் அணிகள் வெற்றியை பெற்றுள்ள போதிலும், பிளே-ஆப் சுற்று அதிலிருந்து கண்டிப்பாக வேறுபடும் என்றும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.