ஆர்சிபி வெற்றி
ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல்லின் 15வது போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் அந்த அணியின் வெற்றிக்கு கை கொடுத்தனர்.
ஒற்றை இலக்கத்தில் அவுட்
முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பான வெற்றித் துவக்கத்தை தந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்கத்தில் களமிறங்கி விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் கடந்த இரு போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வருவதால் அணியின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது.
ஸ்டீவ் ஸ்மித் விளக்கம்
இந்நிலையில் ஆர்சிபிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் போதிய ரன்கள் எடுக்காததே தோல்விக்கு காரணம் என்று அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். பார்ட்னர்ஷிப்பும் சரியாக அமையவில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த நெருக்கடியிலும் லோம்ரார் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
சாத்தியப்படாத வெற்றி
அணியின் பௌலர்கள் சிறப்பாக பந்து வீசிய போதிலும் வெற்றி சாத்தியப்படாததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதலில் களமிறங்கும் 3 வீரர்கள் நின்று விளையாட வேண்டியதன் அவசியத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அணியின் சில விஷயங்களை சரிபடுத்த வேண்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் யூஏஇயில் நிலவும் அதிகமான வெயிலையும் அவர் சுட்டிக் காட்டினார்.