இங்கிலாந்து வெற்றி
கொரோனா ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக கிடப்பில் இருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ம் தேதி துவங்கிய இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. நேற்று முடிவடைந்துள்ள இந்த தொடரில் 3 போட்டிகள் நடைபெற்ற நிலையில், 2க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
பிராட்டிற்கு வீரர்கள் வாழ்த்து
இந்த தொடரின் முக்கிய அம்சமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். சர்வதேச அளவில் இந்த சாதனையை இவர் 7வது நபராக செய்துள்ளார். இதையடுத்து பிராட்டிற்கு சர்வதேச அளவில் முன்னணி வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பயங்கரமான சாதனை என பாராட்டு
முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தொடரை வென்றுள்ள இங்கிலாந்து அணிக்கும் பிராட்டிற்கும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தின்மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இது பயங்கரமான சாதனை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் பிராட்டிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
இளம் வீரர்களுக்கு முன்னுதாரணம்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவின்மூலம் பிராட்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தன்னுடைய திறமை, கடின உழைப்பு உள்ளிட்டவற்றால் பிராட், இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், இங்கிலாந்து வீரர் பால் கொலிங்வுட் உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.