தொடரும் பகை
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நீண்ட வருடங்களாக நேருக்கு நேர் போட்டிகள் நடப்பதில்லை. அரசியல் காரணங்களால், ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டும் தான் இரு அணிகளும் மோதி வருகின்றன. அந்தவகையில் உலகக்கோப்பை தொடரில் இதுவரை மோதியுள்ள ஆட்டங்களில் ஒருமுறை கூட இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை. எனவே இந்த முறை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
பாக்.கேப்டன் நம்பிக்கை
இந்நிலையில் இந்த முறை ஸ்கெட்ச் மிஸ்ஸே ஆகாது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர், மிகப்பெரும் போட்டிகளின் போது, நம் மீது நாம் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளோம் என்பது மிக முக்கியம். அந்த நம்பிக்கை பாகிஸ்தானிடம் மிக அதிகமாகவே உள்ளது. கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு முக்கியமில்லை. வரவிருக்கும் விஷயங்களை பற்றி தான் நாங்கள் சிந்திக்கிறோம். அந்தவகையில் இந்திய அணியை எதிர்கொள்ள நாங்கள் தயாராகிவிட்டோம்.
என்ன திட்டம்?
இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே பெரும் போர் போன்று இருக்கும். அப்படிபட்ட போட்டியில் அதிக அழுத்தங்கள் இருக்கும். ஒரு வீரராகவும் சரி, அணியின் கேப்டனாகவும் சரி நான் கூறுவது என்னவென்றால், எந்தவித பதற்றமும் இருக்க கூடாது. எந்த அளவிற்கு சுலபமாக கருதுகின்றோமோ, அந்த அளவிற்கு பதற்றமின்றி ஆடலாம். எனவே பிரஷரை சரியான விதத்தில் கையாள வேண்டும். அழுத்தத்தை குறைத்து எண்ணோட்டத்தை ஆட்டத்தின் மீது மட்டும் திருப்ப வேண்டும்.
சாதகமான களம்
நான் பாகிஸ்தான் அணிக்குள் வந்ததில் இருந்து, குறைந்தது 3 அல்லது 4 வருடங்களாக அமீரகத்தில் விளையாடியிருப்போம். எனவே அந்த களத்தில் நாங்கள் சிறப்பாக இருப்போம். எப்படி பேட்டிங் செய்ய வேண்டும், எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். எனினும் இந்தியாவை எதிர்கொள்ளும் போதும் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருப்போம் என பாபர் அசாம் கூறியுள்ளார்.