லண்டன் : பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா அணி மோசமாக சேஸிங் செய்தது என்றால், பாகிஸ்தான் அதை விட மோசமாக பீல்டிங் செய்தது. இருந்தும், தென்னாப்பிரிக்கா மொத்தமாக பந்துகளை வீணடித்து தோல்வியை தானே வரவைத்துக் கொண்டது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இமாம், சமான் அபார துவக்கம் அளித்தனர். இருவருமே தலா 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹபீஸ் 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து வந்த ஹாரிஸ் சோஹைல் அதிரடியாக ஆடினார். அவர் 59 பந்துகளில் எடுத்த 89 ரன்கள் தான் பாகிஸ்தான் அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இமாத் வாசிம் 23 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில், 308 ரன்கள் எடுத்தது. லுங்கி நிகிடி 3 விக்கெட்கள் வீழ்த்தினாலும் அதிக அளவில் ரன்களை விட்டுக் கொடுத்தார்.
அடுத்து, தென்னாப்பிரிக்கா அணி 309 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடியது. ஆம்லா 2, டி காக் 47, பாப் டு ப்ளேசிஸ் 63 ரன்கள் சேர்த்தனர். டஸ்ஸன் 36, டேவிட் மில்லர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தென்னாப்பிரிக்கா அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் மிகவும் நிதானமாக ரன் சேர்க்க அந்த அணியின் ரன் ரேட் குறைவாகவே இருந்தது. கடைசி 10 ஓவர்களில் 120 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், கையில் 5 விக்கெட்களை வைத்துக் கொண்டு தென்னாப்பிரிக்கா தடுமாறியது.
அழுத்தம் காரணமாக 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது தென்னாப்பிரிக்கா. பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் பெற்ற தோல்விக்கு ஆறுதல் தேடிக் கொண்டது. இந்த தோல்வி மூலம் தென்னாப்பிரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் பீல்டிங் இந்தப் போட்டியில் சுமாராக இருந்தது. 6 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டனர். மேலும், 15-20 மிஸ்பீல்டிங் செய்தனர். இத்தனை வாய்ப்பு பெற்றும் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது.