கடுமையான மழை
இந்தப் போட்டி நடைபெற உள்ள பிரிஸ்டல் நகரில் கடுமையாக மழை பெய்தது. அதனால், ஆடுகளம் முழுவதுமாக மூடப்பட்டது. குறித்த நேரத்திற்கு டாஸ் போடப்படவில்லை. அதனால், பாகிஸ்தான் ரசிகர்கள் அமைதி இழந்து, எங்கே போட்டி நடைபெறாமல் போய் விடுமோ என புலம்பி வருகின்றனர்.
பாகிஸ்தான் நிலை
பாகிஸ்தான் அணியின் வெற்றியை பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் தான் புலம்பி வருகிறார்கள். பாகிஸ்தான் அணி தன் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வி அடைந்து இருந்தது. எனினும், அடுத்து வலுவான இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.
துடிக்கும் ரசிகர்கள்
அதைத் தொடர்ந்து இலங்கை அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இலங்கை அணி பலவீனமாக இருப்பதால், பாகிஸ்தான் அணி எப்படியும் வெல்லும் என்பதால், எங்கே போட்டி மழையால் கைவிடப்பட்டு, எளிதான வெற்றி வாய்ப்பு கையை மீறி போய் விடுமோ? என பாகிஸ்தான் ரசிகர்கள் துடித்து வருகிறார்கள்.
அவசரப்படும் ரசிகர்கள்
பாகிஸ்தான் தெருக்களில் மழை பெய்யும் போது கூட நாங்கள் கிரிக்கெட் ஆடுவோம். அதே போல, இந்த போட்டியும் மழைக்கு நடுவே நடக்கட்டும் என ஒரு ரசிகர் இணையத்தில் கூறி இருக்கிறார். மற்றொருவர், ரெயின் கோட்டு மாட்டிட்டு வந்து ஒழுங்கா போட்டியை ஆரம்பிங்க என மிரட்டுகிறார்.
20 ஓவர் போட்டி
ஆனால், உண்மையில் போட்டி அடுத்த சில மணி நேரத்திற்கு நடைபெறுவது சந்தேகமே. ஆறு மணி நேரம் வரை அம்பயர்கள் காத்திருப்பார்கள். அப்போதும் மழை விடாத பட்சத்தில் போட்டி கைவிடப்படும். ஒருவேளை போட்டி ஆறு மணி நேரம் கழித்து தொடங்கும் பட்சத்தில் அது 20 ஓவர் போட்டியாக இருக்கும்.
இலங்கைக்கு சாதகம்
இலங்கை அணிக்கு இந்த மழை சாதகமான நிலைமை தான். அந்த அணியின் பேட்டிங் வரிசையில் ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு - மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டுகின்றனர். அந்த அளவு பலவீனமாக உள்ளது அந்த அணி.