இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னணி கிரிக்கெட் வீரர் யூனிஸ்கான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து யூனிஸ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒரு கிரிக்கெட் வீரருக்கு ஓய்வு பெறும் முடிவை எடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம். ஆனால் அதிருஷ்டவசமாக எனக்கு அந்த பிரச்சினையில்லை. நானே விருப்பப்பட்டு, காலத்தை தேர்வு செய்து ஓய்வு முடிவை அறிவிக்க முடிந்துள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இவ்வாறு யூனிஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கு பிறகு எந்த ஒரு ஒருநாள் போட்டியிலும் யூனிஸ்கானை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்யவில்லை. இந்நிலையில் தற்போது அமீரகத்தில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு யூனிஸ்கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, யூனிஸ்கான் தானாக முன்வந்து ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
37 வயதாகும், யூனிஸ்கான் இதுவரை 265 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2000மாவது ஆண்டில் கராச்சியில் இலங்கைக்கு எதிராக முதல்முறையாக களமிறங்கிய யூனிஸ்கான், சுமார் 16 வருடங்கள் ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 7 சதங்கள் மற்றும் 48 அரை சதங்கள் உட்பட, 7240 ரன்கள் விளாசியுள்ளார் யூனிஸ்கான். அபுதாபியில் இன்று நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முதலாவது போட்டிதான் யூனிஸ்கானின் கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.