கொல்கத்தா: உலக கோப்பை டி20 சூப்பர் 10 சுற்றில் வங்கதேசத்தை பாகிஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான்- மோர்தசா தலைமையிலான வங்காளதேசம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணிக் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். பாகிஸ்தான் அணிக்கு அகமது ஷெசாத்தும், ஷார்ஜில் கானும் சிறப்பான தொடக்கம் தந்தனர். அகமது ஷெசாத் அசத்தலாக விளையாடி 39 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3-வது வீரராக களமிறங்கிய முகமது ஹபீஸ் 42 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து கேப்டன் அப்ரிடி களம் இறங்கினார். தனக்கே உரிய பாணியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் அவர் அதிரடி அடித்து ஆடி 19 பந்தில் 4 சிக்ஸ்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 201 ரன்கள் குவித்தது. வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அகமது மற்றும் அராபத் சன்னி தலா 2 விக்கெட்டுகளை வீழத்தினார்கள்.
பாகிஸ்தானை தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டி களம் இறங்கியது வங்கதேசம். தொடக்க ஆட்டகாரர்களாக சவுமிய சர்க்காரும், தமிம் இக்பாலும் களமிறங்கினார்கள். முகமது அமிர் பந்தில் சவுமிய சர்க்கார் ஆப் ஸ்டெம் பறக்க டக் அவுட் ஆனார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிம் இக்பால் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வங்க தேச வீரர்கள் அடித்து ஆட தவறியதால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டும் எடுத்தது. ஆல்ரவுண்டர் சாகிப் அல் ஹசன் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
இதனால் பாகிஸ்தான் 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர் மற்றும் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆட்டநாயகனாக அப்ரிடி தேர்வு செய்யப்பட்டார்.