7 வெற்றிகள்
உண்மைதான்.. இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை உலகக் கோப்பை ஒரு நாள் தொடர்களில் மொத்தம் 7 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. ஆனால் ஒருமுறை கூட பாகிஸ்தான் வெற்றி பெற்றதில்லை. 7 போட்டிகளிலும் இந்தியாதான் ஜெயித்துள்ளது. இது மிகப் பெரிய வரலாறாக மாறியுள்ளது. உலகக் கோப்பைப் போட்டி என்று வந்து விட்டாலே, இந்தியாவுக்கு உற்சாகமும், பாகிஸ்தானுக்கு நடுக்கமும் ஏற்படுவது சகஜமாகி விட்டது.
அப்துல் ரஸ்ஸாக் விளக்கம்
இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதை ரஸ்ஸாக் விளக்கியுள்ளார். இந்தியா -பாகிஸ்தான் மோதிய 7 உலகக் கோப்பைப் போட்டிகளில் 3 போட்டிகளில் அதாவது 1999, 2003, 2011 ஆகிய ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் கலந்து கொண்டவர் ரஸ்ஸாக். அவர் கூறுகையில், இந்தியா இந்த சாதனையை மேலும் சில காலம் தொடரும் வாய்ப்புகளே அதிகம். இதற்கு சில காரணங்கள் உள்ளன என்றுள்ளார்.
இந்தியாவின் ஒருங்கிணைப்பு
இந்தியா -பாகிஸ்தான் அணிகள் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் மோதுவது என்பது அரிதாக உள்ளது. அப்படி விளையாடும்போது இந்தியாவின் கையே ஓங்கி நிற்கிறது. நமது வீரர்கள் நெருக்கடியை திறம்பட சமாளிக்க முடியாமல் கோட்டை விடுவதே அதற்குக் காரணம். இந்தியா அந்த நெருக்கடியை அருமையாக சமாளிக்கிறது. பரபரப்பை விட வெற்றியை மட்டுமே அவர்கள் மனதில் வைத்து ஆடுகின்றனர் என்றும் ரஸ்ஸாக் கூறியுள்ளார்.
ஷார்ஜாவில் நம் கை ஓங்கியது
ஷார்ஜா போட்டிகளில் இந்தியாவை நாம் அதிக முறை வென்றுள்ளோம். கனடாவிலும் கூட 2 முறை வென்றுள்ளோம். 1999 உலகக் கோப்பைப் போட்டியின்போது நமது அணிக்கு மீடியா உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் அதிக நெருக்குதல் தரப்பட்டது. அதுவே நமது தோல்விக்கு முக்கியக் காரணம். இன்று வரை அது தொடர்வது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிக பதட்டம்
மற்ற போட்டிகள் போலத்தான் இதையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் வீரர்கள் மீது சுமத்தப்படும் நெருக்கடியால் அவர்கள் பதட்டமடைகின்றனர். உலகக் கோப்பையில் நம்மால் இந்தியாவை வீழ்த்த முடியாது என்ற எண்ணத்துக்குள் அவர்கள் போய் விடுகிறார்கள். 2011 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு இந்தியாவை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்தும் நம்மால் முடியவில்லை என்றார் ரஸ்ஸாக்.