கார்டிப்: இலங்கைக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங்கை செய்தது இலங்கை. அந்த அணியின் ஸ்கோர் 26 ரன்னாக இருக்கும்போது குணதிலகா 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 27 ரன்னிலும், சண்டிமால் டக்அவுட்டிலும் வெளியேறினார்கள். கேப்டன் மேத்யூஸ் சிறிதுநேரம் தாக்குப்பிடித்து தன் பங்கிற்கு 39 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
அதன்பின்னர் வந்த வீரர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடக்க வீரர் டிக்வெல்லா சிறப்பாக விளையாடி 73 ரன்கள் சேர்த்தார். திசாரா பெரேரா (1), லக்டல் (26), குணரத்னே (27), நுவான் பிரதீப் (1) ரன்களில் ஆட்டம் இழக்க இலங்கை அணி 49.2 ஓவரில் 236 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஜுனைத் கான், ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
இதன் பின்னர் 237 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டி களமிறங்கிய பாகிஸ்தான் நிதானமாக பேட்டிங் செய்தது. சீரான இடைவேளியில் விக்கெட்டை இழந்தாலும் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதின் நிதான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் பாகிஸ்தான் 44.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சர்ஃப்ராஸ் அகமது 61, பஃகர் ஜமான் 50, அசார் அலி 34 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டியில் நாளை மறுதினம் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.