இஸ்லாமாபாத்: இந்திய அணிக்கு ரோகித் சர்மா கிடைத்திருப்பது பெரும் அதிர்ஷ்டம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ் கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் சிறந்த, அதிரடியான ஹிட் மேன் ரோகித் சர்மா. ஐசிசி ஒருநாள் தர வரிசையில் விராட் கோலிக்கு அடுத்து 2வது இடத்தில் இருக்கிறார். கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே வெறும் 5 புள்ளிகள் தான் வித்தியாசம் உள்ளதால், விரைவில் முதலிடத்துக்கு வர ரோகித்துக்கு வாய்ப்பு இருக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அவரது சாதனைகளை யாருமே நெருங்க முடியாத படி உள்ளது. 3 இரட்டை சதங்கள், 7 முறை 150 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளார்.
உலக கோப்பை தொடரில் 9 இன்னிங்சுகளில் ஆடி 5 சதங்களை விளாசினார். ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரராக ரோகித் சர்மா உள்ளார். உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 140 ரன்கள் குவித்தார்.
அந்த போட்டியை இரு நாட்டு ரசிகர்களும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இது குறித்து பேசிய பாக். முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ், ரோகித் சர்மாவை போன்று ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டம் என்றார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: பந்துகளை அவர் அபாரமாக கணித்து விளையாடுகிறார். பந்தை விரைவிலேயே கணித்துவிடுவதால் அருமையான ஷாட்டுகளை அடித்து தள்ளுகிறார். மற்ற வீரர்களை போல அவர் இல்லை. நிறைய விதமான ஷாட்டுகளை ஆடுகிறார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென் ரோகித் தான் என்று கூறி உள்ளார்.