ஆசிய கோப்பை சர்ச்சை
ஆசிய நாடுகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை அடுத்தாண்டு பாகிஸ்தான் தான் தொகுத்து வழங்க உரிமை பெற்றுள்ளது. இதற்காக இந்திய அணி நீண்ட வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பயணம் செய்யவுள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் இந்தியா பயணம் செல்லாது என பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில்-ன் தலைவராகவும் உள்ள ஜெய்ஷா அறிவித்தார்.
என்ன காரணம்
இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் செல்ல மத்திய அரசு அனுமதி தரவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசியக்கோப்பையை பாகிஸ்தானில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் ஜெய் ஷா கூறினார். இது பாகிஸ்தான் ரசிகர்களையும், வாரியத்தையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருந்தது.
பாகிஸ்தானின் அறிவிப்பு
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா பேசியுள்ளார். நாங்கள் தெளிவான முடிவு எடுத்துவிட்டோம். பாகிஸ்தானுக்கு இந்தியா வந்தால், நாங்களும் 2023 உலகக்கோப்பைக்காக இந்தியாவுக்கு செல்வோம். இல்லையென்றால் போக முடியாது. பாகிஸ்தான் பங்கேற்காத உலகக்கோப்பையை பார்க்க யார் விரும்புவார்கள்? இனி அதிரடியான முடிவுகள் மட்டுமே எடுப்போம்.
அதுவே போதும்
பாகிஸ்தான் அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. எங்கள் அணியின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியில் தான் ஈடுபட்டு வருகிறோம். சிறப்பாக ஆடினால் தான் அது நடக்கும். 2021 டி20 உலகக்கோப்பையிலும், ஆசிய கோப்பையிலும் இந்தியாவை வீழ்த்தினோம். பலகோடி மதிப்பில் பொருளாதாரம் கொண்ட இந்திய அணியை வீழ்த்தியதே போதும் என ரமீஷ் ராஜா கூறியுள்ளார்.