சொதப்பல் ரகம்
309 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்ரிக்க அணியில் டுபிளெசிஸ், டி காக் இருவரை தவிர மற்றவர் சொதப்பல் ரகம். ஆம்லா, மில்லர் ஆகிய நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து ஏமாற்றினர். பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்காததால் தென் ஆப்ரிக்க 259 ரன்கள் மட்டுமே எடுத்து, பாகிஸ்தானிடம் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரை விட்டும் வெளியேறி இருக்கிறது.
பீல்டிங் மோசம்
வெற்றி பெற்றுவிட்ட போதிலும், கடந்த போட்டிகளில் கிடைத்த அர்ச்ச்னைகளையும், வசவுகளையும் பாகிஸ்தான் நினைத்து பார்க்கவில்லை என்று தான் தோன்றுகிறது. அப்படி இருந்தது அந்த அணியின் பீல்டிங். வழக்கம் போலவே பீல்டிங்கில் படுமோசம்.
தென் ஆப்ரிக்கா மோசம்
முக்கிய கேட்ச்களை விட்டு தள்ளினர். ஆனால் அந்த வாய்ப்புகளை கூட தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தி கொண்டு, வெற்றியை பெறவோ அல்லது எதிரணிக்கு நெருக்கடி அளிக்கவோ முன் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால், பாகிஸ்தான் பீல்டிங்கை விட தென் ஆப்ரிக்க பேட்ஸ் மேன்கள் மோசமாக பேட்டிங் செய்தனர் என்று சொன்னால் தான் மிக பொருத்தமாக இருக்கும்.
மிஸ் செய்த கேட்ச்
டுபிளெசிஸ் விக்கெட்டுக்கு பிறகு மில்லரும் வான்டர் டசனும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது, வஹாப் ரியாஸ் வீசிய 37வது ஓவரின் 4வது பந்தில் வான்டர் டசன் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த கேட்ச்சை பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் அகமது கோட்டை விட்டார்.
இரண்டாவது கேட்ச்
இத்தனைக்கும் மிக எளிதான கேட்ச். சரி...இது தான் இப்படி என்றால், அதற்கு அடுத்த பந்தில் நடைபெற்ற சம்பவம் பாக். ரசிகர்களை ஆத்திரப்பட வைத்தது. மில்லரும் தேர்டு மேன் திசையில் ஒரு கேட்ச் கொடுத்தார். இதுவும் எளிதான கேட்ச் தான். ஆனால் அதை அங்கிருந்த பீல்டர் முகமது அமீர் தவறவிட்டார். ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 கேட்ச்களை பாகிஸ்தான் அணியினர் கோட்டைவிட்டனர் பாகிஸ்தான் வீரர்கள்.
வெற்றி பெறவில்லை
முக்கிய போட்டியில் சுறுசுறுப்பாகவும், ஆக்ரோஷமாகவும் இல்லாமல் அசட்டையாக இருந்து கேட்சுகளை விடுவதை பாக். ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. லட்டு போன்ற இது மாதிரியான வாய்ப்புகளை கூட கோட்டை விட்ட தென் ஆப்ரிக்கா, வெற்றியின் பக்கம் போக வில்லை.