அதிரடி மாற்றங்கள்
உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றதை அடுத்து அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடத்தப்பட்டன. தலைமை பயிற்சியாளர் உள்ளிட்டவர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் மிஸ்பா-உல்-ஹக் நியமிக்கப்பட்டார்.
கேப்டன் சர்பராஸ் அகமது நீக்கம்
இந்நிலையில் சொந்த மண்ணில் இலங்கை அணியுடன் பாகிஸ்தான் அணி மோதியது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோதிய நிலையில் ஒருநாள் போட்டி தொடரை வென்ற பாகிஸ்தான், டி20 தொடரை பறிகொடுத்தது. இதையடுத்து கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது அதிரடியாக நீக்கப்பட்டார்.
அணியிலிருந்தும் நீக்கம்
கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சர்பராஸ் அகமது அணியிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்த வாரத்தில் ஆஸ்திரேலியாவுடன் பாகிஸ்தான் மோதவுள்ள சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.
சிறப்பான ஆட்டம்
கிரிக்கெட்டில் தன்னுடைய ஆட்டம் மற்றும் கேப்டனாக பல போட்டிகளில் அணியை முன்னெடுத்து சென்ற சர்பராஸ் அகமது கேப்டன் பதவியிலிருந்தும் அணியிலிருந்தும் நீக்கப்பட்டது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது.
பிரதமர் இம்ரான்கான் அறிவுறுத்தல்
இந்நிலையில் சர்பராஸ் அகமது தேசிய போட்டிகளில் விளையாடி அணியை பலப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் கேட்டுக் கொண்டுள்ளார். தேசிய அணி வலிமையானால், பாகிஸ்தான் அணியும் பலப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இம்ரான் கருத்து
டி20 போட்டிகளை மட்டுமே வைத்து ஒரு வீரரின் திறமையை மதிப்பிடக் கூடாது என்று தெரிவித்துள்ள இம்ரான் கான் சர்பராஸ் அகமது தேசிய போட்டிகளில் தனது கவனத்தை திருப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இம்ரான் பாராட்டு
பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளராக மிஸ்பா-உல்-ஹக் நியமிக்கப்பட்டதற்கும் இம்ரான்கான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது மிகச்சிறந்த முடிவு என்று தெரிவித்துள்ள அவர், மிஸ்பா அதிகமான அனுபவம் மற்றும் நேர்மை கொண்டவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.