உலகக்கோப்பை தோல்வி
2019 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி படு மோசமான தோல்விகளையும், அட்டகாசமான வெற்றிகளையும் பெற்றது. திடீரென ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது. இறுதியில் அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வாகும் வாய்ப்பை இழந்தது.
இம்ரானை மதிக்காத கேப்டன்
இந்திய அணிக்கு எதிரான முக்கிய போட்டியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் அணிக்கு சில யோசனைகளை கூறி இருந்தார். குறிப்பாக, டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்யவும் என்றார். ஆனால், பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மது பந்துவீச்சை தேர்வு செய்தார். அது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இம்ரான் பேச்சு
இந்த நிலையில், அமெரிக்கா சென்ற இம்ரான் கான், அங்கே வாழும் பாகிஸ்தானியர்கள் இடையே பேசினார். "உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சீரமைக்க வேண்டும் என நான் முடிவு செய்துள்ளேன்" என்றார்.
பன்ச் டயலாக்
"என் வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த உலகக்கோப்பை தொடரில் நீங்கள் பார்க்கும் அணி சிறந்த அணியாக இருக்கும். சிறந்த திறன் உள்ளவர்கள் அணிக்குள் வரும்படி அதன் அமைப்பு மாற்றி அமைக்கப்படும்" என்றார் இம்ரான் கான்.
மோசமான நிலை
என்ன தான் பிரதமர் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்தாலும், ஒரு நாட்டின் பிரதமர் கிரிக்கெட் அணியை நானே சீரமைக்கிறேன் என்று கூறும் அளவிற்கு இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.
பிரதமருக்கு ஏன் இந்த வேலை?
இது ஒரு புறம் என்றால், சிலர் இம்ரான் கான் பாகிஸ்தான் நாட்டின் பிரதமரா? இல்லை பயிற்சியாளரா? அவரே ஏன் இறங்கி அணியை சீரமைக்க வேண்டும். நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை அவர் தீர்க்கலாமே என்று கூறி இருக்கிறார்கள்.