உலகக்கோப்பை போட்டி
2019 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதலில் தடுமாறி வந்தது. அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற இருந்தது. இந்திய அணி பெரிதாக அலட்டிக் கொள்ளாவிட்டாலும், பாகிஸ்தான் அணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றத்தில் இருந்தது.
இம்ரான் கான் சொன்ன யோசனை
அந்த முக்கியமான போட்டிக்கு முன் தற்போதைய பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனுமான இம்ரான் கான், பாகிஸ்தான் கேப்டன் டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும், தோல்வி பயம் அறவே கூடாது என ட்விட்டரில் யோசனை கூறி இருந்தார்.
பாக். கேப்டன் எடுத்த முடிவு
ஆனால், அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மது பந்துவீச்சை தேர்வு செய்து அதிர்ச்சி அளித்தார். போட்டிக்கு முந்தைய நாட்களில் மழை பெய்ததால் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும். அதனால், பந்துவீச்சை எடுத்தோம் என்றார் அவர்.
போட்டியில் தோல்வி
ஆனால், இந்திய அணியின் துவக்க வீரர்களை பிரிக்கவே தடுமாறியது. இந்திய அணி 50 ஓவர்களில் 336 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் தடுமாறி தோல்வி அடைந்தது.
வலுத்த விமர்சனம்
அதன் பின், பாகிஸ்தான் அணி கேப்டனுக்கு கடுமையான விமர்சனம் எழுந்தது. பாகிஸ்தான் ஊடகங்களும், ரசிகர்களும் வெளுத்து வாங்கினர். உலகக்கோப்பை தொடரிலும் அந்த அணி பிளே-ஆஃப் முன்னேறவில்லை.
இம்ரான் கான் விளாசல்
இம்ரான் கான் சர்ப்ராஸ் எடுத்த முடிவு பற்றி இதுவரை எதுவும் கூறாமல் இருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தோல்வி பயத்தை பற்றி பேசி, சர்ப்ராஸ் அஹ்மதை விளாசினார். 2 மாதம் காத்திருந்து நேரம் பார்த்து விளாசி இருக்கிறார் இம்ரான் கான்.
தோல்வி பயம்
இம்ரான் கான் கூறுகையில், தோல்வி பயம் வரும் போது நம் முடிவுகள் வேறு மாதிரி இருக்கும். வேறு திட்டம், எதிர்மறை மற்றும் தற்காப்பு நிலைக்கு வந்து விடுவோம் என்றார். அடுத்து சர்ப்ராஸ் அஹ்மதை உதாரணம் காட்டினார்.
எப்படி என்றால், சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் நம் கேப்டன் செய்தது போல. டாஸ் வென்ற பின், நீங்கள் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும், எதிரணியை பேட்டிங் செய்ய அழைக்கக் கூடாது என்றார்.
கேப்டன் பதவி காலி
ஏற்கனவே, உலகக்கோப்பை தோல்வியால் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மது கேப்டன் பதவி தப்புமா? என்ற சந்தேகம் இருந்தது. சந்தேகமே வேண்டாம் அவரை வீட்டுக்கு அனுப்பப் போகிறோம் என மேடையில் அவரை அவமானப்படுத்தி, சொல்லாமல் சொல்லி இருக்கிறார் இம்ரான் கான்.
இம்ரான் கான் முடிவுகள்
இம்ரான் கான் ஏற்கனவே, தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சிறந்த அணியாக மாற்றிக் காட்டுகிறேன் என வாக்குறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியில் இனி அவர் முடிவுகள் தான் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.