லண்டன்: 180 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தானிடம் இன்று விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தோற்றுள்ளது. இது பல வகைகளிலும் இந்தியாவுக்கு மறக்க முடியாத போட்டியாகும்.
ஐசிசி போன்ற முக்கிய 50 ஓவர் தொடர்களில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதில்லை என்ற சகாப்தம் மாறிவிட்டது. இதுவரை நடந்த எந்த ஒரு உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே கிடையாது.
ஆனால், இன்று இப்படி ஒரு முக்கியமான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதாவது மினி உலக கோப்பையில், பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. அதுவும் 180 ரன்கள் வித்தியாசத்தில்.
ஐசிசி தொடர் ஒன்றின் பைனலில் இதுவரை எந்த அணியும் இவ்வளவு அதிகமான ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கிடையாது என்ற சாதனையை பாகிஸ்தான் இன்று படைத்துள்ளது.
அதேபோல இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் பாகிஸ்தான் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். ஆறுதலளிக்கும் ஒரே விஷயம், இன்று நடைபெற்ற உலக கோப்பை லீக் ஹாக்கியில், பாகிஸ்தானை இந்தியா 7-1 என்ற கணக்கில் தோற்கடித்துள்ளது. ஹாக்கியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் பெற்ற பெரிய தோல்வி அதுவாகும்.