பாகிஸ்தான் கேப்டனுக்கு விருது
கடந்த ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்புரியும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து ஐசிசி விருது வழங்கி வருகிறது. கடந்த 3 மாதங்களாக இந்த விருதினை இந்திய வீரர்கள் பெற்ற நிலையில் தற்போது பாகிஸ்தான் கேப்டனுக்கு ஏப்ரல் மாதத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
வீரர், வீராங்கனை தேர்வு
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது திங்கட்கிழமை இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கென ஐசிசி நியமித்துள்ள தேர்வுக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் இணைந்து இந்த விருதுக்கான வீரர் மற்றும் வீராங்கனைகனை தேர்வு செய்கின்றனர். அதுபோல கடந்த மாதத்திற்கான வீரர் மற்றும் வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரிஷப் பந்த் பெற்ற விருது
கடந்த ஜனவரி மாதத்தில் முதல் முறையாக இந்த விருது வழங்கப்பட்ட நிலையில் முதல் விருதினை இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் பெற்றார். தொடர்ந்து பிப்ரவரி மாதத்திற்கான விருது ஆர் அஸ்வினுக்கும் மார்ச் மாதத்திற்கான விருது புவனேஸ்வர் குமாருக்கும் கொடுக்கப்பட்டது.
பாபர் அசாமிற்கு விருது
இந்நிலையில் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்புரிந்த பாபர் அசாமிற்கு தற்போது இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலிசா ஹீலிக்கு விருது
இதனிடையே ஆஸ்திரேலிய வீராங்கனை ஆலிசா ஹீலி ஐசிசி வீராங்கனைக்கான விருதை பெற்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 155 ரன்களை எடுத்ததன்மூலம் ஹீலிக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்த தொடரின் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.