அதிகரிக்கும் உயிரிழப்புகள்
கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் கோரத்தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. தினம்தினம் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. இதை மீண்டும் துவங்கும் நோக்கத்தில் பல்வேறு விதிமுறைகளை ஐசிசி விதித்துள்ளது. அதில் ஒன்று பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுதான்.
வீரர்கள் எதிர்ப்பு
இந்நிலையில் இந்த தடைக்கு சர்வதேச அளவில் அனைத்து தரப்பு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காலங்காலமாக நடைமுறையில் உள்ள இந்த வழக்கத்தை தடுப்பதன்மூலம் பந்தை ஸ்விங் செய்வதில் தடை ஏற்படும் என்றும் இதன்மூலம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கிரிக்கெட் போட்டிகள் மாறிவிடும் என்றும் போட்டிகளின் சுவாரஸ்யங்கள் குறைந்துவிடும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
வாசிம் அக்ரம் எச்சரிக்கை
இந்நிலையில், முன்னாள் பாகிஸ்தான் பௌலர் வாசிம் அக்ரம் பந்தை ஷைன் செய்ய எச்சிலுக்கு மாற்றை கண்டுபிடிக்க ஐசிசி நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளார். எச்சிலை பயன்படுத்த தடை விதித்தால் பௌலர்கள் ரோபோக்கள் போல வருவார்கள். பந்து வீசுவார்கள், திரும்புவார்கள் என்று தெரிவித்துள்ள அவர், பந்தை ஸ்விங் செய்வது கடினமாக மாறிவிடும் என்றும் கூறியுள்ளார்.
பௌலர்களுக்கு பொறுமை அவசியம்
இதற்கென பந்து பழையதாக மாறும்வரை காத்திருந்து ஸ்விங் செய்ய முயலவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அக்ரம் கூறியுள்ளார். இதற்கென பௌலர்களுக்கு மிகுந்த பொறுமை தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பல நாடுகள் குளிர்பிரதேசங்களாக உள்ள நிலையில், வியர்வையை கொண்டு மட்டும் பந்தை ஷைன் செய்வது இயலாத காரியம் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
தொடர்ந்து பேசிய அக்ரம், தான் தன்னுடைய கேரியரில் இதுபோன்றதொடு விஷயத்தை அனுபவித்ததில்லை என்றும், அடுத்த மாதம் துவக்கத்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் தொடரில் பௌலர்கள் எத்தகையதொரு அனுபவத்தை பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.