டெல்லி: ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதுபோல ஒரு தோனி மட்டுமே இருக்க முடியும். அவரைப் போல செய்ய முயற்சித்து, பாகிஸ்தான் விக்கெட் கீப்பரும் கேப்டனுமான சர்பராஸ் அகமது மொக்கை வாங்கினார்.
பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரை 5-0 என அபாரமாக வென்றது பாகிஸ்தான். நேற்று நடந்த கடைசி ஆட்டத்தின்போது, பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பராஸ் அகமதுக்கு ஒரு திடீர் விபரீத ஆசை ஏற்பட்டது.
இரண்டு ஓவர்கள் பவுலிங் செய்தால் என்ன என்று, விக்கெட் கீப்பிங் பொறுப்பை பகர் ஜமானிடம் கொடுத்தார். 48வது ஓவரை வீசினார் சர்பராஸ். அந்த ஓவரில் 6 ரன்கள் கொடுத்தார்.
மீண்டும் 50வது ஓவரையும் அவர் வீசினார். அந்த ஓவரில் ஜிம்பாப்வேயின் பீட்டர் மூர் ஒரு ஹிமாலய சிக்சரை அடித்து சர்பராஸ்க்கு சர்ப்பரைஸ் கொடுத்தார். முதல் முறையாக பவுலிங் செய்த சர்பராஸ் 2 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்தார். இறுதியில் பாகிஸ்தான் 131 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, 2009ல் இதுபோல பவுலிங் செய்தார். ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். தோனியைப் போல பவுலிங் செய்து விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று நினைத்த சர்பராஸ், அந்த சிக்சரை மறக்கவே மாட்டார்.