கராச்சி: பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வினுடன் மோத ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உலக அளவில் தலை சிறந்த ஸ்பின்னராக மாறி வருகிறார். மிகப் பெரிய ஜாம்பவான் பேட்ஸ்மேன்களையும் அவரது பந்து வீசசு திணறடிக்கிறது. அதேபோல பாகிஸ்தானில் கலக்கிக் கொண்டிருப்பவர் யாசிர் ஷா.
இவரும் அஸ்வினைப் போலவே அதி வேகமாக வி்க்கெட்களை வீழ்த்தி அசத்திக கொண்டிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதி வேகமாக 100 விக்கெட்களை வீழ்த்திய 2வது வீரராக உருவெடுத்துள்ளார் யாசிர் ஷா. இன்னொரு வீரர் இங்கிலாந்தின் ஜார்ஜ் லோஹ்மான்.
இதுகுறித்து அவர் கூறுகையில் நான் சாதனை படைக்க வாழ்த்தியிருந்தார் அஸ்வின். அவருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். ஒரு மிகப் பெரிய பவுலர், அதுவும் அதி வேகமாக 200 விக்கெட்களை வீழ்த்திய 2வது பவுலர் நம்மை வாழ்த்துவது என்பது மிகப் பெரிய விஷயம். நமக்கு உத்வேகம் கொடுக்கக் கூடியது. அந்த வகையில் அஸ்வினின் வாழ்த்து எனக்கு உத்வேகம் அளித்தது என்று கூறியுள்ளார் ஷா.
சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில்தான் அஸ்வின் அதிவேகமாக 200 விக்கெட் வீழ்த்திய 2வது வீரராக சாதனை படைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
யாசிர் ஷா மேலும் கூறுகையில் நான் அஸ்வினுடன் மோத தயாராக இருக்கிறேன். ஆர்வமாக இருக்கிறேன். ஒவ்வொரு பாகிஸ்தான் வீரரும், இந்திய வீரரும் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ளவே ஆர்வம் காட்டுவார்கள். அது இயற்கையானதும் கூட. அதே ஆர்வம் எனக்கும் உள்ளது. இந்தியாவுக்கு எதிராக நான் டெஸ்ட் ஆடியதில்லை. அதுவும் அஸ்வினுடன் பலப்பரீட்சை நடத்த ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஷா.
கடந்த 2007ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் டெஸ்ட் தொடர் எதிலும் மோதியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இரு தரப்பு தொடர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன.