கொல்கத்தா: இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணிக்கு, அந்த நாட்டு அரசு அனுமதியளித்த நிலையில், அணியின் 27 உறுப்பினர்கள், கொல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தனர்.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று தற்போது நடந்துவருகிறது. சூப்பர் 10 சுற்று, 15ம் தேதி ஆரம்பிக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் 19ம் தேதி கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க பாதுகாப்பு காரணங்கள் இழுபறியாக இருந்த நிலையில், தங்கள் அணியை இந்தியா செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதியளித்துள்ளது. அரசு அனுமதி கிடைத்த சில மணி நேரங்களில், லாகூர் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை, 27 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி கொல்கத்தாவுக்கு கிளம்பியுள்ளது.
அபுதாபி வழியாக, கொல்கத்தா வர வேண்டும் என்பதால், மாலையில் பாக். அணியினர் கொல்கத்தா வந்து சேர்ந்தனர். இதில் 15 பேர் விளையாட்டு வீரர்களாகும். எஞ்சியோர் கிரிக்கெட் சார்ந்த உதவியாளர்கள், பயிற்சியாளர்கள் போன்ற பிற பிரிவினராகும்.
பாக். வீரர்கள் வருகையையொட்டி, கொல்கத்தாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு நல்ல விருந்தோம்பல் தரப்படுவது வழக்கம் என்றும், இம்முறையும் அப்படிதான் நடக்கும் என்றும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.