கிரிக்கெட் போட்டிகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விளையாட்டு உலகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இதுவரை துவங்கவில்லை. மூன்று மாதமாக எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடக்காத நிலையில், இங்கிலாந்து அணி முதல் அணியாக தங்கள் நாட்டில் டெஸ்ட் தொடரை நடத்த உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்
வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை இரண்டாம் வாரத்தில் துவங்க உள்ளது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்து - பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த மாதமே இங்கிலாந்து சென்று தனிமையில் இருந்து பின்னர் பயிற்சி செய்து டெஸ்ட் தொடரில் ஆட தயார் ஆகி உள்ளது. அந்த டெஸ்ட் தொடர் ஜூலை 28 வரை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
கொரோனா வைரஸ் பரிசோதனை
பாகிஸ்தான் அணி ஜூலை 28 அன்று இங்கிலாந்து கிளம்ப உள்ளது. கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் நாட்டில் பயிற்சி செய்தனர். இங்கிலாந்து கிளம்பும் முன் இரு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர் நடக்குமா?
அதில் முதல் பரிசோதனை முடிவில் 10 வீரர்கள் மற்றும் ஒரு அணி உதவியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடர் நடக்குமா? என்ற சந்தேகமும் எழுந்தது.
உறுதி
ஆனால், இரு அணிகளும் எப்படியாவது இந்த தொடரை நடத்திவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்களை அழைத்துச் செல்ல பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளது.
14 நாட்கள் தனிமை
தனி விமானத்தில் ஜூன் 28 அன்று பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்து செல்ல உள்ளனர். இங்கிலாந்து சென்ற உடன் அங்கே வொர்செஸ்டையர் என்ற பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாகிஸ்தான் வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
பாதிப்பு நீங்கிய பின்..
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மீதமுள்ள பாகிஸ்தான் வீரர்கள் பாதிப்பு நீங்கிய பின் இங்கிலாந்து சென்று தங்கள் அணியுடன் இணைவார்கள் எனவும் கூறப்படுகிறது. ஆனால், அதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அனைத்து வீரர்களும் மீண்டும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்த பின்னர் ஜூலை 13 முதல் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
அட்டவணை வெளியாகும்
இதற்கிடையே இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடருக்கான அட்டவணை வெளியாகும் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அணி வீரர்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நிலையிலும், இங்கிலாந்து அணி அவர்களுடன் கிரிக்கெட் தொடரில் ஆட ஒப்புக் கொண்டுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.