2வது போட்டி இன்று துவக்கம்
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் கடந்த 5ம் தேதி துவங்கிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சௌதாம்டனின் ஏஜியஸ் பௌலில் இன்று இரண்டாவது போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த போட்டியை வெல்ல இரண்டு அணிகளும் முனைப்பில் உள்ளன.
பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க மாட்டார்
அடுத்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க மாட்டார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள அவரது தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர் அங்கு பயணம் மேற்கொள்வதால் அவர் அடுத்த இரு போட்டிகளில் இடம்பெறவில்லை.
வாய்ப்பை பயன்படுத்த அறிவுறுத்தல்
இந்நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் அணி வெற்றிக்கனியை பறிக்க அணியின் உதவி பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் அணி வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பென் ஸ்டோக்ஸ் போட்டியின் வெற்றியாளர் என்று பாராட்டியுள்ள யூனிஸ், அவர் இல்லாத நிலையில் இங்கிலாந்தின் மிடில் ஆர்டர் வலுவிழந்து காணப்படும் என்றும் கூறியுள்ளார்.
சிறப்பாக செயல்படும் பாக். பௌலர்கள்
ஸ்டோக்ஸ் எதிரணியிடம் இருந்து வெற்றியை மிக எளிதாக பறித்து சென்று விடுவார் என்று தெரிவித்துள்ள வக்கார், ஆனால் கடந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் அவரை மிகவும் எளிதாக பாகிஸ்தான் பௌலர்கள் வீழ்த்தியுள்ளதன்மூலம் அணி சரியான பாதையில் பயணிப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் பௌலர்கள் முகமது அப்பாஸ், ஷாஹின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா சிறப்பாக செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.