பாகிஸ்தான் அணி இன்று பயணம்
இங்கிலாந்து -பாகிஸ்தான் இடையிலான 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டி தொடர் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இதற்கென பாகிஸ்தான் அணியினர் இன்று இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர். 20 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 11 ஊழியர்கள் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்.
10 வீரர்களுக்கு கொரோனா
முன்னதாக இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளவிருந்த வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த பயணத்தையொட்டி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 10 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதில் 6 பேருக்கு மீண்டும் டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நெகட்டிவ் வந்துள்ளது.
10ல் 6 பேருக்கு கொரோனா நெகட்டிவ்
முதல்கட்டமாக கொரோனா உறுதி செய்யப்பட்ட வீரர்கள் முகமது ஹபீஸ் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தாங்களாகவே மறு பரிசோதனை மேற்கொண்டதில், அதில் கொரோனா இல்லை என தெரியவந்தது. இதையடுத்தே, பிசிபி எடுத்த கொரோனா டெஸ்ட்கள் குறித்து கேள்வி எழும்பியது. இதையடுத்து, பிசிபி மீண்டும் மறு பரிசோதனைகள் எடுத்ததில்தான் 6 பேருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது.
பிசிபி சிஇஓ உறுதி
இதனிடையே, முதல் டெஸ்ட்டில் கொரோனா பாதிப்பு இல்லாத 20 வீரர்கள் மற்றும் 11 ஊழியர்கள் இன்று பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் டெஸ்டில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்த வீரர்களுக்கு மீண்டும் இருமுறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் அவர்களின் பயணம் குறித்து திட்டமிடப்படும் என்றும் பிசிபி சிஇஓ வாசிம் கான் தெரிவித்துள்ளார்.
14 நாட்கள் தனிமைப்படுத்தல்
இன்று மான்செஸ்டருக்கு பயணப்படும் பாகிஸ்தான் வீரர்கள், அங்கிருந்து வொர்செஸ்டர்ஷயருக்கு செல்லவுள்ளனர். அங்கு அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்படவுள்ளது. இதையடுத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்பு அவர்கள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகவும் வாசிம் கான் தெரிவித்துள்ளார்.