பாக். அன்டர்-19 அணி குறித்து கருத்து
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அன்டர் -19 அணிகளுக்கிடையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அன்டர் -19 அணியின் இந்த தோல்வி குறித்து அந்நாட்டின் முன்னாள் பந்துவீச்சாளரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சோயிப் அக்தர் தனது யூடியூப் சேனலில் விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பாராட்டும் அக்தர்
தன்னுடைய யூடியூப் சேனலின் மூலம் உலக அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகள், தொடர்கள் குறித்து தொடர்ந்து கருத்துக்களை தலாடடியாக சோயிப் அக்தர் பதிவு செய்து வருகிறார். இந்திய வீரர்கள் குறித்தும், சர்வதேச போட்டிகளில் அவர்களின் ஆட்டங்கள் குறித்தும் தனது கருத்தை தெரிவித்துவரும் அக்தர், இந்திய வீரர்கள் குறிப்பாக கேப்டன் விராட் கோலியின் தலைமை மற்றும் அவரது ஆட்டம் குறித்தும் பாராட்டி வருகிறார்.
சதமடித்த ஜெய்ஸ்வால்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அன்டர் -19 அணிகளுக்கிடையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய துவக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 105 ரன்களை அடித்தார்.
பாகிஸ்தான் வீரர்களை கலாய்த்த அக்தர்
இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த தோல்வி குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள அக்தர், தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக பானிப்பூரி விற்ற ஜெய்ஸ்வால், தற்போதைய தன்னுடைய நிலையை அடைவதற்காக பல்வேறு கட்டங்களில் பலவிதமான போராட்டங்களை கண்டுள்ளதை குறிப்பிட்டார். ஜெய்ஸ்வாலின் வாழ்க்கையில் இருந்து பாகிஸ்தான் அன்டர் -19 வீரர்கள் பாடம் கற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெய்ஸ்வால் பின்னே ஓடும் பணம்
மும்பையின் பால் பண்ணைகளில் ஆரம்பத்தில் படுத்துறங்கிய ஜெய்ஸ்வால், தற்போது அன்டர் -19 அணிக்காக இரண்டு சதங்களை அடித்துள்ளதை சுட்டிக் காட்டிய அக்தர், சாதனைகளின் பின்னே ஜெய்ஸ்வால் ஓட, அவரை பணம் துரத்திச் சென்றுக் கொண்டிருப்பதாகவும் பாராட்டு தெரிவித்தார். அவர் இந்திய அணியில் இடம்பெற்று பல்வேறு உயரங்களை தொடுவார் என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் போர்டின் மெத்தனம்
பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான பயிற்சியை பெறுவதற்கு நல்ல திறமையான பயிற்சியாளர்களை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தயக்கம் காட்டுவதாகவும் அக்தர் குற்றம் சாட்டினார். சிறப்பான பயிற்சியின்மையால் பாகிஸ்தானில் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்க முடியாமல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.